கிருஷ்ணகிரி அருகே விநாயகர் சிலை திருட்டு
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகேயுள்ள அக்ரஹாரம் கிராமத்தில் சிவாஜி நகர் பகுதியில் உள்ள பவானிஅம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2003-ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு பவானி அம்மன், விநாயகர், ஆஞ்சநேயர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த கோவிலுக்கு சுற்றுப்புறத்தைச் சேர்ந்த பக்தர்களும், கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கோவிலில் இருந்த விநாயகர் சிலையை மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு திருடிச் சென்றார்கள்.நேற்று காலை வழக்கம் போல் பக்தர்கள் கோவிலுக்கு சென்றனர். அவர்கள் கோவிலில் விநாயகர் சிலை மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி அணை போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த சிலை திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.