மன்னார்குடி அருகே கிராம நிர்வாக அலுவலரை தாக்கியவர் கைது
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள 3-ம் சேத்தி கிராம நிர்வாக அலுவலராக (பொறுப்பு) பணியாற்றி வருபவர் ஜெரால்டு ராஜ்குமார். இவருக்கு கோரையாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளி செல்வதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் ஜெரால்டு ராஜ்குமார், உதவியாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு டிராக்டரில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்ததை சோதனை செய்தனர்.
அந்த சமயத்தில் மஞ்சனவாடியை சேர்ந்த அன்பு என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் கிராம நிர்வாக அலுவலர் ஜெரால்டு ராஜ்குமாரை மிரட்டி கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் கோட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய அன்புவை கைது செய்தனர். அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
கைதான அன்பு தற்போது மன்னார்குடி மாறன் நகரில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.