செய்திகள்

நீட் தேர்வு வல்லுநர் குழு அமைக்க தாமதம் ஏன்?: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

Published On 2017-09-22 07:10 GMT   |   Update On 2017-09-22 07:10 GMT
நீட் தேர்வு வல்லுநர் குழு அமைக்க தாமதம் ஏன்? என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை:

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரியலூரை சேர்ந்த அனிதா என்ற மாணவி சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்துக்கு அனைத்து கட்சியினரும் இரங்கல் தெரிவித்தனர். அதை தொடர்ந்து அனிதா மரணத்துக்கு காரணமான தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் விரைவில் அமைக்கப்படும். மேலும், நீட் தேர்வுக்கான வல்லுநர் குழுவும் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். ஆனால் தமிழக அரசு இதுவரை நீட் தேர்வு தொடர்பான வல்லுநர் குழுவை அமைக்கவில்லை.

இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பான வல்லுநர் குழுவை அமைக்காத தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நீட் தொடர்பான வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி என்.கிருபாகரன் அரசு மற்றும் அமைச்சர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

‘நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று தருவதாக கூறி மக்களை ஏமாற்றி இருக்கிறீர்கள். நீட் தேர்வு பயிற்சி மையம் அமைக்க அரசுக்கு ஒரு மணி நேரம் போதாதா? நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெற்றுத் தரும்வரை அமைச்சர்கள் யாரும் ஊடகங்களுக்கு பேட்டி தர வேண்டாம். நீங்கள் செய்துள்ள கால தாமதத்தால் ஒரு உயிரை இழந்திருக்கிறோம். நீட் வல்லுநர் குழுவை அமைப்பதில் கால தாமதம் ஏன்? நீட் தேர்வு பயிற்சி மையம் அமைப்பது தொடர்பாக அக்டோபர் 6-ம் தேதி பதில் தரவேண்டும்‘ என நீதிபதி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News