கண்ணமங்கலம் அருகே ராணுவ வீரர் வீட்டில் கொள்ளை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள அழகுசேனை கிராமம் சூளைமேடு கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 47). ஓய்வுப்பெற்ற ராணுவ வீரர். இவர், தற்போது சென்னை ஆவின் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
சிவக்குமார், தனது சொந்த ஊரில் புதிதாக வீடு கட்டி வருகிறார். சிவக்குமார் சென்னையில் இருப்பதால், அவரது மனைவி மேரி மற்றும் குடும்பத்தினர் புதிய வீட்டிற்கான கட்டுமான பணியை கவனிக்கிறார்கள்.
கட்டுமான பணிகள் காரணமாக, பழைய வீட்டில் இருந்த பொருட்களை, அருகே ஒரு சிறிய அறை அமைத்து வைத்திருந்தனர். இந்த நிலையில், நேற்றிரவு மேரி மற்றும் குடும்பத்தினர் புதிய வீட்டில் படுத்து உறங்கினர்.
இன்று காலை எழுந்து பார்த்தபோது, பொருட்கள் வைத்திருந்த அறை கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த ரூ.65 ஆயிரம் பணம் மற்றும் ½ பவுன் நகை கொள்ளை போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, மேரி, கண்ணமங்கலம் போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் மனோகர் சம்பவ இடத்தில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.