செய்திகள்

நீட் தேர்வை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் ரெயில் மறியல்

Published On 2017-09-11 07:04 GMT   |   Update On 2017-09-11 07:04 GMT
நீட் தேர்வை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் இன்று ரெயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 45 நிமிடம் மின்சார ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செவ்வாப்பேட்டை:

‘நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரியும், மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இன்றும் மாணவர்களின் போராட்டம் நீடித்தது. வேப்பம்பட்டில் உள்ள தனியார் கல்லூரி மாணவ-மாணவிகள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து இன்று காலை 9.15 மணியளவில் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் திரண்டனர்.

அவர்கள் திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற மின்சார ரெயிலையும், சென்னையில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்ற மின்சார ரெயிலையும் மறித்தனர்.

அப்போது நீட் தேர்வுக்கு எதிராகவும், மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் கோ‌ஷங்கள் எழுப்பினர். அப்போது ரெயில்வே போலீஸ்காரர் ஒருவர் மாணவர்களை கலைந்து செல்லுமாறு கூறினார். அப்போது மாணவர்களுக்கும், ரெயில்வே போலீஸ்காரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த மாணவர்கள் மின்சார ரெயில் மீது கற்களை வீசி தாக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டது.

டி.எஸ்.பி. புகழேந்தி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு சுமார் 10 மணியளவில் கலைந்து சென்றனர்.

மாணவர்களின் திடீர் போராட்டத்துக்கு திருவள்ளூர்-சென்னை, சென்னை-திருவள்ளூர் மார்க்கத்தில் சுமார் 45 நிமிடம் மின்சார ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News