செய்திகள்

விழுப்புரத்தில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2017-09-02 11:51 GMT   |   Update On 2017-09-02 11:51 GMT
விழுப்புரத்தில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் கப்பூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் சுரேந்திரபாபு (வயது 22). இவர் திருவெண்ணைநல்லூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.ஏ. படித்து வருகிறார்.

நடராஜன் முருகன் கோவில் தெருவில் புதுவீடு கட்டி வருகிறார். அந்த வீட்டுக்கு சென்ற சுரேந்திர பாபு திடீரென்று அந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அந்த வழியாக சென்றவர்கள் அவர் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து காணை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சுரேந்திரபாபு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் காமராஜர் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மாணவர் சுரேந்திரபாபு ஏன்? தற்கொலை செய்து கொண்டார் என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News