செய்திகள்

பழனி வனபகுதியில் சிறுத்தை நடமாட்டம்

Published On 2017-08-22 11:41 GMT   |   Update On 2017-08-22 11:41 GMT
பழனி வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

பழனி:

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பழனி வனப்பகுதி 18 ஆயிரம் எக்டேர் பரப்பளவு கொண்டது. இங்கு யானை, மான், காட்டெருமை கரடி,காட்டுப்பன்றி, கேளையாடு உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் சுதந்திரமாக நடமாடி வருகிறது.

இங்கு வாழ்ந்துவரும் யானை, காட்டுப்பன்றி, மான் போன்றவை உணவுக்காகவும் குடிநீருக்காகவும் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புக்குள்ளும் நுழைந்து தென்னை, வாழை, கரும்பு போன்ற பயிர்களை சேதபடுத்தி வருகிறது.

கடந்த சிலநாட்களாக அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லும் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தெரிவித்து வருகின்றனர். தற்போது பழனி வனப்பகுதியில் சிறுத்தை ஒன்று உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை வனப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் சிறுத்தையின் படம் பதிவாக வில்லை.

இருந்தபோதிலும் அடர்ந்த வனப்பகுதியில் சிறுத்தை இருப்பதால் சுற்றுலாப்பயணிகளுக்கோ பொது மக்களுக்கோ ஆபத்து இல்லை. ஆனால் சுற்றுலா பயணிகள் பொது மக்கள் இப்பகுதியில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும். ஆதலால் பொதுமக்களுக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கும் தொடர்ந்து பழனி கொடைக்கானல் ரோட்டில் வாகனத்தில் செல்லும்போது அடர்ந்த வனப்பகுதிகளில் வாகனத்தை நிறுத்த கூடாது.

இயற்கையை ரசிப்பதற்காக வாகனத்தை நிறுத்தி விட்டு வனப்பகுதிக்குள் செல்லக் கூடாது. சாலை ஓரங்களில் இருக்கும் கிராமபுறங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும் என எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News