search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழனி வனப்பகுதி"

    பழனி வனப்பகுதியில் விலங்குகள் நடமாட்டம் குறித்து கண்காணிக்க 100 காமிராக்கள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
    பழனி:

    பழனி வனப்பகுதியில் காட்டுயானை, சிறுத்தை, கடமான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசிக்கின்றன. இவற்றை பாதுகாக்கும் பணியில் பழனி வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    பழனி அருகே பாப்பம்பட்டி, காவலப்பட்டி, குதிரையாறு அணைப்பகுதி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட வனப்பகுதிகள் ஆனைமலை வனச்சரணாலயத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    அந்த வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 6 பீட் பகுதிகளில் வனவிலங்குகளை கண்காணிக்க காமிராக்களை பொருத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனத்துறை முடிவு செய்தது. அதன்படி தற்போது ஆனைமலை வனச்சரணாலயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தற்போது தொடங்கியுள்ளது.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

    பாப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட 6 பீட் பகுதிகளில் தற்போது 100 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்த காமிராக்கள் ஒவ்வொன்றும் பொருத்தப்பட்டுள்ள இடத்தில் இருந்து 7½ மீட்டர் தூரத்தில் நடமாடும் விலங்குகளை புகைப்படம் எடுக்கும் திறன் கொண்டவை.

    முயல் உள்ளிட்ட சிறிய விலங்குகள் முதல் யானை உள்ளிட்ட பெரிய விலங்குகளின் நடமாட்டத்தை இந்த காமிராக்கள் மூலம் துல்லியமாக கண்டறியலாம்.

    வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கும் போது மட்டும் இந்த கேமராக்கள் செயல்படும். மற்ற நேரங்களில் காமிராவின் இயக்கத்தை தானாக நிறுத்தும் வகையில் ஒரு கருவியும் காமிராவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    இந்த காமிரா மூலம் எடுக்கும் படங்கள் அதில் உள்ள தற்காலி நினைவகத்தில் சேமிக்கப்படும். அதன் மூலம் எங்களால் எந்தெந்த பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்பதை எளிதில் கண்டறிய முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    பழனி வனப்பகுதியில் தற்போது சிறுத்தை, புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    பழனி:

    பழனி வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன.

    வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை மற்றும் பிற விலங்குகளின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு பணி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். அதன்படி கடந்த 24-ந்தேதி பழனி, கொடைக்கானல் வனப்பகுதியில் வசிக்கும் விலங்குகள் குறித்த கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

    தற்போது கணக்கெடுப்பு பணிகள் முடிந்து விட்டது. இதுகுறித்து பழனி வனத்துறையினரிடம் கேட்ட போது, பாலசமுத்திரம் காப்புக்காடு, கோணவாய்க்கால் பகுதியில் சிறுத்தையின் கால்தடம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள மரங்களிலும் அவற்றின் நகக்கீரல்கள் பதிவாகி இருந்தன. அவற்றின் மூலம் சிறுத்தைகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது.

    அதே போல் புலிகளின் கால்தடங்களும் வனப்பகுதியில் பதிவாகி உள்ளது. பழனி வனப்பகுதியில் தற்போது சிறுத்தை, புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் யானைகள், காட்டுமாடுகள், மான்கள் உள்ளிட்டவைகளையும் நேரில் பார்த்து கணக்கெடுத்துள்ளோம்.

    கணக்கெடுப்பின் முழு விவரம் மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர் மாவட்ட வன அலுவலர் பழனி, கொடைக்கானல் பகுதியில் வசிக்கும் வனவிலங்குகளின் எண்ணிக்கை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றனர். #tamilnews
    ×