ஓட்டேரியில் ஆட்டோவுடன் எரிந்து ரவுடி பலி
வில்லிவாக்கம்:
பட்டாளம் கே.எம்.கார்டன் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ்குமார் என்கிற அப்பு (வயது 30), ரவுடி. ஆட்டோ ஓட்டிவந்தார். இவர் மீது புளியந்தோப்பு, அயனாவரம், ஓட்டேரி போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
நேற்று இரவு அவர் ஓட்டேரி பாலம் அருகே ஆட்டோவை நிறுத்திவிட்டு அதன் உள்ளேயே தூங்கினார். நள்ளிரவில் திடீரென ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது. இதில் அப்பு மீதும் தீ பற்றியது. உடல் கருகிற அவர் அலறியடித்தப்படி வெளியே வந்தார்.
சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ஆட்டோவில் பற்றிய தீயை அணைத்தனர். பின்னர் அப்புவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அப்பு பரிதாபமாக இறந்தார்.
அப்புவுடன் ஏற்கனவே மோதலில் உள்ளவர்கள் அவரை தீவைத்து எரித்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிரார்கள்.
அப்புக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் கொலை நடந்ததா? அல்லது அப்பு தற்கொலை செய்து கொண்டாரா? என்றும் விசாரணை நடந்து வருகிறது.