செய்திகள்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவி: தேர்தல் ஆணையத்தில் தீபா அணி மனு

Published On 2017-08-17 08:19 GMT   |   Update On 2017-08-17 08:20 GMT
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவிக்கு தீபா அணியினரும் சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், டெல்லியில் இன்று தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர்.
சென்னை:

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவிக்கு எடப்பாடி அணியினரும், ஓ.பி.எஸ். அணியினரும் மோதி கொண்டுள்ளனர். தினகரனும் அ.தி.மு.க. தலைமை பதவியை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார்.

அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவை அடுத்து தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியுள்ளது. இந்த சின்னத்தை மீண்டும் பெறுவதற்காக இரு அணிகளும் இணைவதற்கான முயற்சிகளும் தீவிரப்படுத்தபட்டுள்ளன.

இந்த நிலையில் தீபா அணியினரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டி போட்டு வருகிறார்கள்.

இது தொடர்பாக அந்த அணியின் தலைமை செய்தி தொடர்பாளர் வக்கீல் பசும்பொன்பாண்டியன், கடலூர் வெங்கட் ஆகியோர் டெல்லியில் இன்று தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ். அணியினர் போலியாக ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர்.

நாங்கள் சமர்ப்பித்துள்ள ஆவணங்களே உண்மையானவை. எனவே எங்களுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தீபா அணி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனுவும், இன்று மாலை தாக்கல் செய்யப்படுகிறது. அதில் தீபா அணியினரை கேட்காமல் எந்த முடிவும் எடுக்க கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News