செய்திகள்

பல்லடம் அருகே மளிகை கடையில் தீ விபத்து

Published On 2017-08-14 09:14 GMT   |   Update On 2017-08-14 09:14 GMT
பல்லடம் அருகே மளிகை கடையில் தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்லடம்:

பல்லடம் அருகே கணபதிபாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு பெரியசாமி புறப்பட்டு சென்றார்.

நள்ளிரவு 12 மணியளவில் மளிகை கடையில் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், பெரியசாமிக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அவர் விரைந்து வந்தார். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைத்தார். ஆனால் தீ விபத்தில் கடையில் இருந்த அரிசி, பருப்பு, பிஸ்கட் பாக்கெட்டுகள், சிகரெட், தீப்பெட்டிகள், மற்றும் மளிகை பொருட்கள், பிரிட்ஜ் உள்ளிட்டவை எரிந்து சேதமானது. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

இந்த தீ விபத்து குறித்து பல்லடம் போலீசில் பெரியசாமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இதற்கிடையே பெரியசாமி மளிகை கடையில் மர்ம கும்பல் பெட்ரோல் குண்டு வீசியதால் தீ விபத்து ஏற்பட்டதாக அப்பகுதியில் காட்டு தீ போல் தகவல் பரவியது. இதனால் பரபரப்பும்- பீதியும் ஏற்பட்டது.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், நள்ளிரவில் சிலர் மளிகை கடை முன்பு மது குடித்து விட்டு சிகரெட்டை புகைத்துள்ளனர். இதில் சிகரெட்டை அணைக்காமல் வீசி சென்றதால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்தது.

Tags:    

Similar News