search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shop fire accident"

    • மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பஸ் நிலையத்தில் இருந்து கோவை, பழனி உள்பட பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. பஸ் நிலையத்தின் வடக்கு புறம் திருச்சி, கரூர், பழனி செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தின் பின்புறத்தில் பேக்கரி மற்றும் செல்போன் கடைகள் உள்ளது. நேற்றிரவு வியாபாரிகள் கடைகளை அடைத்து விட்டு சென்றனர். இன்று அதிகாலை பேக்கரி கடை நடத்துபவர்கள் தங்களது கடைகளை திறக்க வந்தனர்.

    அப்போது கடைகளின் ஷட்டரில் இருந்து கரும்புகை வந்து கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் உடனே தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் ஒரு பேக்கரி கடை , 3 செல்போன் கடை ஆகியவற்றில் தீ மளமளவென பற்றி எரிந்தது.


    தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதனிடையே தீயணைப்பு வாகனங்களில் இருந்த தண்ணீரும் காலியானது. உடனே தீயணைப்பு நிலைய அதிகாரிகள் தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்பு கண்ணனை தொடர்பு கொண்டு தெரிவிக்கவே, அவர் நகராட்சி தண்ணீர் லாரிகளை அனுப்பி வைத்தார். இதையடுத்து அதன் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    இருப்பினும் பேக்கரி கடையில் இருந்த பிரிட்ஜ், பேன், டி.வி., இனிப்பு வகைகள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் செல்போன் கடைகளில் இருந்த விலையுயர்ந்த செல்போன்கள் தீயில் எரிந்து சேதமானது. அவற்றின் மதிப்பு ரூ.20 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாராபுரம் பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் மேம்பாட்டு பணிக்காக இடிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்து ஏற்பட்ட 4 கடைகளின் உரிமையாளர்களுக்கும் தற்காலிக கடை ஒதுக்கப்பட்டு கடைகள் இடிக்கப்பட இருந்தது. இந்தநிலையில் தீ விபத்து ஏற்பட்டு 4 கடைகளும் சேதமாகி உள்ளன. சேதமான கடைகளை நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • கடையின் முன்பு கட்டியிருந்த தார்பாயில் பற்றி எரிய தொடங்கியது.
    • போக்குவரத்து மிகுந்த சாலையில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் 24 மணி நேரமும் போக்கு வரத்து நிறைந்து இருக்கும்.

    இப்பகுதியில் சாலையில் ஒருபுறம் சாலையோர கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சல்மான் பாரிஸ் என்பவர் சாலை ஓரத்தில் மாலை நேர டிபன் கடை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு சல்மான் பாரிஸ் வழக்கம்போல் வியாபாரத்தை நடத்தி கொண்டிருந்தார். அப்போது திடீரென சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்து திடீரென தீப்பற்றியது. தொடர்ந்து தீ மளமளவென கடையின் முன்பு கட்டியிருந்த தார்பாயில் பற்றி எரிய தொடங்கியது.

    உடனே சாலை ஓரத்தில் உணவருந்தி கொண்டு இருந்தவர்கள், உணவை கீழே போட்டு விட்டு அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரத்தில் தீ பற்றி எரிய தொடங்கியது. இது குறித்து தகவலறிந்த கடையநல்லூர் போலீசார் அந்த பகுதியில் உள்ள போக்குவரத்தை நிறுத்தினர்.

    அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். ஆனால் கடையநல்லூர் தீயணைப்புத்துறையில் இருந்த வண்டி அருகில் உள்ள ஊருக்கு பூக்குழி திருவிழாவிற்கு சென்றதால் அதற்கு பதிலாக 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வாசுதேவநல்லூர் தீயணைப்புத்துறை வாகனத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    ஆனால் வாகனம் வருவதற்கு தாமதமானதால் அங்கே இருந்த இளைஞர்கள் முகமது காலித், அக்பர், ஹாஜி உட்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் எதிரே இருந்த ஹார்டுவேர்ஸ் கடையில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து தீயை அணைத்தனர். பொது மக்களும், வாலிபர்களும் துரிதமாக செயல்பட்டதால் கடையநல்லூரில் போக்குவரத்து மிகுந்த சாலையில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது.

    • ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் ஓச்சேரி சாலையில் மின் விளக்கு அலங்காரம் செய்யும் கடை இயங்கி வந்தது. இந்தக் கடையில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்து மள மளவென எரிந்து கொண்டிருந்தது.

    இதுகுறித்து அரக்கோணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த விபத்தில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான மின் அலங்கார சாதனங்கள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    போலீசார் வழக்கு பதிவு செய்து மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 2 கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் முருகக்கனி. இவர் கிருஷ்ணன் கோவில் பஸ் நில யம் அருகில் மதுரை- செங்கோட்டை சாலையில் ஒரே கட்டிடத்தில் கடைகள் வைத்துள்ளார். கீழ் தளத்தில் செருப்பு கடையும், மேல்தளத்தில் பரிசுப் பொருட்கள் கடையும் நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு முருகக்கனி வீட்டுக்கு சென்று விட்டார்.

    இன்று காலை மாடியில் இருந்த பரிசுப்பொருட்கள் கடையில் இருந்து கரும்புகை வெளியானது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம், பக்கத்தினர் உடனே முருகக்கனிக்கு தகவல் கொடுத்தனர்.

    மேலும் கிருஷ்ணன் கோவில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால் அதற்குள் தீ கீழே உள்ள செருப்பு கடைக்கும் பரவியது.

    தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் தீயின் தாக்கம் அதிகம் இருந்ததால் விருதுநகரில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

    மாவட்ட தீயணைப்பு அலுவலர் கருப்பையா தலைமையில் 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் போலீசார் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் 2 கடைகளில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.

    இது குறித்து கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×