செய்திகள்
வடவள்ளி அருகே பக்கெட் தண்ணீரில் மூழ்கி 10 மாத பெண் குழந்தை பலி
வடவள்ளி அருகே விளையாடிக் கொண்டு இருந்த 10 மாத குழந்தை பிளாஸ்டிக் பக்கெட்டில் பிடித்து வைத்து இருந்த தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தது.
கோவை:
கோவை வடவள்ளி அருகே உள்ள கோல்டன் நகரை சேர்ந்தவர் சிவக்குமார். கூலித் தொழிலாளி. இவரது 10 மாத பெண் குழந்தை ஈசா ஸ்ரீ. சம்பவத்தன்று சிவக்குமார் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தூங்கி கொண்டு இருந்தனர்.
ஈசா ஸ்ரீ வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்தாள். அப்போது பிளாஸ்டிக் பக்கெட்டில் பிடித்து வைத்து இருந்த தண்ணீரில் குழந்தை விழுந்தது மூழ்கியது. சிறிது நேரத்துக்கு பின்னர் குழந்தையை தேடிய சிவக்குமார். குழந்தை பக்கெட்டில் மூழ்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக குழந்தையை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.