ராமநாதபுரத்தில் ஆசிரியர் வீட்டில் நகை- பொருட்கள் கொள்ளை
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் சூரன் கோட்டை ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவர் சுவாமிநாதன் (வயது 75), ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் கடந்த 8-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் உறவினர் வீட்டிற்கு சென்றார்.
நேற்று சுவாமிநாதன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து பொருட்கள் வெளியே சிதறிக் கிடந்தன.
இது குறித்து ராமநாதபுரம் பஜார் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். பீரோவில் இருந்த 6 பவுன் நகைகள், 5 பட்டுச் சேலைகள், செல்போன்கள், வெள்ளிப் பொருட்கள் கொள்ளை போயிருப்பதாக சுவாமிநாதன் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.