செய்திகள்

புதுவையில் சூறை காற்றுடன் பலத்த மழை

Published On 2017-07-30 05:29 GMT   |   Update On 2017-07-30 05:29 GMT
புதுவையில் பலத்த சூறைக் காற்றுடன் கூடிய மழை கொட்டியதில் பல்வேறு இடங்களில் மரக் கிளைகள் முறிந்து விழுந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டன.
புதுச்சேரி:

கோடைகாலம் முடிந்தும் புதுவையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது.

புதுவை பகுதியை ஒட்டி உள்ள விழுப்புரம், கடலூர், திண்டிவனம், செஞ்சி பகுதிகளில் மழை பெய்தாலும் புதுவையில் மழை பெய்யவில்லை.

மாலை வேளைகளில் மேகம் திரண்டு மழை பெய்யும் என்று எதிர் பார்த்தால் அதில் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் இரவு நேரங்களில் அனல்காற்றாலும், புழுக்கத்தினாலும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 12.30 மணியளவில் பலத்த சூறை காற்று வீசியது. இதனைத்தொடர்ந்து இடி- மின்னலுடன் மழை கொட்டியது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது.

இந்த மழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. சூறை காற்றில் புதுவையில் பல்வேறு இடங்களில் மரக் கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. காலை 7 மணிக்கு பிறகே மின்சாரம் வந்தது.

இடி- மின்னல் தாக்கியதில் பல்வேறு பகுதிகளில் வீட்டில் இருந்த டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதானது.
Tags:    

Similar News