செய்திகள்

விஷம் குடித்து மகனுடன் பெண் சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது

Published On 2017-07-27 15:17 GMT   |   Update On 2017-07-27 15:18 GMT
மனைவியையும், மகனையும் தற்கொலைக்கு தூண்டிய கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேந்தமங்கலம்:

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை குண்டூர் நாட்டில் உள்ள தேனூர்பட்டியைச் சேர்ந்தவர் அன்புராஜ் (வயது 40). இவரது மனைவி ரோஜா (25). இவர்களுக்கு 4 வயதில் சவுந்தர்ராஜன் என்ற மகனும் ஒரு மாத பெண் கைகுழந்தையும் இருந்தது.

இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி இரவு தனது 4 வயது மகன் சவுந்தர்ராஜனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதன்பேரில் கொல்லிமலை வாழவந்திநாடு போலீசார், அன்புராஜிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

சம்பவத்தன்று தமது தோட்டத்தில் விளைந்திருந்த அன்னாசி பழங்களை பறிக்க தனது மனைவி ரோஜாவை அன்புராஜ் அழைத்துள்ளார். ஆனால் அவர் பெண் குழந்தை பிறந்து 40 நாட்கள் தான் ஆகிறது. எனவே எனது உடல்நிலை சரியில்லாததால் அன்னாசி பழங்களை பறிக்க வரமுடியாது என தெரிவித்துள்ளார்.

இதை கேட்டு ஆத்திரம் அடைந்த அன்புராஜ் தோட்டத்தில் வேலையை கவனிக்காத நீ எனக்கு தேவையில்லை. நான் சந்தைக்கு சென்று வருவதற்குள் நீ உயிரோடு இருக்கக்கூடாது என திட்டி அடித்து உதைத்துள்ளார். இதனால் மனமுடைந்த ரோஜா மகன் சவுந்தர்ராஜனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து விவசாயி அன்புராஜ் மீது நேற்று போலீசார் மனைவியையும், மகனையும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News