search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தற்கொலைக்கு தூண்டுதல்"

    நாகர்கோவிலில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தற்கொலைக்கு தூண்டியதாக கணவனை போலீசார் கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அருணாசலம் (வயது 37). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சரண்யா (26). இவர்களுக்கு ரிஸ்கா (4) என்ற மகளும், ஐசக் ஆபிரகாம் (2) என்ற மகனும் இருந்தனர். சமீபகாலமாக அருணாசலம் நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளி பின்புறம் உள்ள தெற்கு தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். 

    அருணாசலத்துக்கு குடிப்பழக்கம் இருந்தது. அடிக்கடி பணிக்கு செல்லாமல் சுற்றித்திரிந்தார். இதனால் அருணாசலத்துக்கும், அவரது மனைவி சரண்யாவுக்கும் தகராறு இருந்து வந்தது. சரண்யாவின் பெற்றோர் அவ்வப்போது வீட்டுக்கு வந்து கணவன்-மனைவியை சமாதானப்படுத்தி வந்தனர். 

    நேற்று முன்தினம் இரவும் அருணாசலத்துக்கும், சரண்யாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதுபற்றி சரண்யா தனது பெற்றோருக்கு போன் செய்து கதறி அழுதார். அவர்கள் காலையில் வீட்டுக்கு வருவதாக கூறி இருந்தனர். நேற்று காலை அருணாசலம் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டு சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தார். 

    அப்போது வீட்டில் குழந்தைகள் ரிஸ்கா, ஐசக் ஆபிரகாம் ஆகியோர் பிணமாக கிடந்தனர். சரண்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து பிணமாக தொங்கினார். கணவருடன் ஏற்பட்ட தகராறில் குழந்தைகள் 2 பேரையும் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு சரண்யா தற்கொலை செய்தது தெரியவந்தது. 

    தகவல் அறிந்து வீட்டுக்கு வந்த சரண்யாவின் உறவினர்கள், அருணாசலத்தை பார்த்ததும் ஆத்திரம் அடைந்தனர். அவரை சரமாரியாக தாக்கினர். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. அங்கு நின்ற போலீசார் உறவினர்களிடம் இருந்து அருணாசலத்தை மீட்டு போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். 

    சரண்யா மற்றும் அவரது குழந்தைகள் சாவு தொடர்பாக சரண்யாவின் உறவினர் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் நேற்றுமுன்தினம் இரவு தகராறு நடந்தபோது சரண்யாவை அருணாசலம் செத்து தொலை என கடுமையாக வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் ஏற்பட்ட வருத்தத்திலேயே சரண்யா விபரீத முடிவை எடுத்துள்ளார். எனவே சரண்யாவின் கணவர் அருணாசலம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். 

    அதன்பேரில் போலீசார் சரண்யாவை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து அருணாசலத்தை கைது செய்தனர். 
    இதுதவிர சரண்யா தற்கொலை செய்தது தொடர்பாக ஒரு வழக்கும், குழந்தைகளை கொன்றதற்காக சரண்யா மீது இந்திய தண்டனை சட்டம் 302 பிரிவின் கீழ் மற்றொரு வழக்கும் போலீசார் பதிவு செய்துள்ளனர். 

    சரண்யா மற்றும் குழந்தைகளின் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரி சோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. 
    ×