செய்திகள்
காட்டில் கிடந்த கோவில் சாமி சிலை கிரீடங்கள்: போலீசார் கைப்பற்றி விசாரணை
நெல்லை அருகே காட்டில் கிடந்த கோவில் சாமி சிலை கிரீடங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ளது எட்டாங்குளம். இந்த பகுதியில் தனியார் பள்ளி அருகே பாலசந்தர் என்பவரது தோட்டம் உள்ளது. இங்குள்ள ஒரு புதரில் கற்றாழை செடிக்குள் ஒரு பை கிடந்தது. சந்தேகம் அடைந்த அப்பகுதியினர் இதுபற்றி மானூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையில் போலீசார் அங்கு சென்று அந்த பையை எடுத்து பார்த்தனர். அதில் அரிசியும், அதன் உள்ளே கோவில் சாமி சிலைக்கு வைக்கக்கூடிய பித்தளை கிரீடங்களும் கிடந்தன.
இவை அப்பகுதிக்கு வந்தது எப்படி, அதை புதருக்குள் வைத்து சென்றவர்கள் யார்? கோவிலில் திருடப்பட்டவையா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.