செய்திகள்

திருத்துறைப்பூண்டி அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பலி

Published On 2017-07-23 14:36 GMT   |   Update On 2017-07-23 14:36 GMT
திருத்துறைப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கோமல் கீழ தெருவை சேர்ந்தவர் அருள் பிரகாசம். இவரது மகன் வெங்கடேசன் (29). ஐ.டி.ஐ. படித்துள்ளார்.

இவர் முத்துப்பேட்டையில் உள்ள தனியார் மோட்டார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு 11 மணியளவில் வேலை முடிந்து இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

ஆலத்தம் பாடி அருகே கரும்பியூர் குளம் சிவன் கோவில் எதிரே வந்த போது திருவாரூரில் இருந்து திருத்துறைப் பூண்டி வந்த அரசு பஸ் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேசன் சம்பவ இடத்திலே இறந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

விபத்து குறித்து ஆலிவலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News