செய்திகள்
கோவை அருகே லாரி மோதி ஆட்டோ டிரைவர் பலி
கோவை அருகே லாரி மோதி ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை பூமார்க்கெட் அருகே உள்ள தெப்பக்குளம் தெரு 2-வது வீதியை சேர்ந்தவர் தர்மலிங்கம்(வயது 60). ஆட்டோ டிரைவர்.
இவரும், அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பரான ஜெகதீசன் என்பவரும் நேற்று மதியம் மொபட்டில் தடாகம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். மாதேஸ்வரன் கோவில் அருகே சென்ற போது அவ்வழியாக வந்த லாரி இவர்களது மொபட் மீது மோதியது.
இதில் தர்மலிங்கம் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போக்கு வரத்து புலனாய்வு மேற்கு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். லாரியை ஓட்டி சென்ற தஞ்சாவூரை சேர்ந்த முருகேசன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.