செய்திகள்

மன்னார்குடி அருகே மாடுகள் திருடிய 3 பேர் கைது

Published On 2017-07-22 13:50 GMT   |   Update On 2017-07-22 13:50 GMT
மன்னார்குடி அருகே மாடுகள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 2 கறவை மாடுகள் மற்றும் மினிவேனையும் பறிமுதல் செய்தனர்.

மன்னார்குடி:

மன்னார்குடி அருகே உள்ள விக்கிரபாண்டியம் பகுதி கீழாந்தோப்பை சேர்ந்தவர் பக்கிரிசாமி விவசாய கூலி தொழிலாளி.இவருக்கு சொந்தமாக 20 மாடுகள் உள்ளது. இந்த மாடுகளை தினமும் பக்கிரிசாமி தனது நிலத்தில் மேய்த்துவிட்டு வீட்டிற்கு கொண்டு வந்து கட்டுவது வழக்கம்.

சம்பவத்தன்று வழக்கம் போல் இரவில் மாடுகளை கட்டிவிட்டு காலையில் பால் கரப்பதற்கு வந்துள்ளார். அப்போது 2 கறவை மாடுகள் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் எங்கு தேடியும் மாடுகள் கிடைக்கவில்லை. இது குறித்து பக்கிரிசாமி விக்கிரபாண்டியம் போலீசில் புகார் கொடுத்தார்.

இதுபற்றி அறிந்த திருத்துறைப்பூண்டி துணை சூப்பிரண்டு ஜெயராஜ் உத்தரவின் பேரில் கோட்டூர் இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்துராமலிங்கம் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்தி, மோகன், அருண் ஆகியோர் சேந்தமங்கலம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவர்கள் பக்கிரிசாமின் மாடுகளை திருடியது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 2 கறவை மாடுகள் மற்றும் மினிவேனையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சின்னக்குருவாடியை சேர்ந்த கார்த்தி (வயது 23), சபரிநாதன் (வயது 22), விக்கிரபாண்டியை சேர்ந்த வருண் (வயது 22) என்பது தெரியவந்தது.

Tags:    

Similar News