செய்திகள்
குடும்ப தகராறு: கூலி தொழிலாளி விஷம் குடித்து பலி
தர்மபுரி அருகே குடும்ப தகராறில் கூலி தொழிலாளி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள அச்சுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 45). கூலி தொழிலாளி. இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நேற்று இரவு மீண்டும் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த கணேசன் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து, மயங்கி விழுந்தார். பின்னர் அவரை மீட்டு உறவினர்கள் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.