செய்திகள்

மருத்துவ படிப்பில் 85 சதவீத இடஒதுக்கீடு: கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு

Published On 2017-06-25 12:48 GMT   |   Update On 2017-06-25 12:48 GMT
தமிழ்நாடு மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். சேர்க்கையில் 85 சதவீதம், சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட மாணவர்களக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு கிராமப் புற மாணவர்களுக்கு பயன் அளிக்காது என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னை:

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு மத்திய அரசு அனுப்பவில்லை. இதனால் தமிழகத்தில் நீட் தேர்வின் அடிப்படையிலேயே எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். மாணவர் சேர்க்கை நடை பெற உள்ளது.

தமிழ்நாடு மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். சேர்க்கையில் 85 சதவீதம், சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட மாணவர்களக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டசபையில் நேற்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பு கிராமப் புற மாணவர்களுக்கு பயன் அளிக்காது என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசு பள்ளி மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் நுழைய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசின் சார்பில் எலைட் பயிற்சி திட்டம் ராமநாதபுரம், கன்னியாகுமரி, பெரம்பலூர் மாவட்டங்களில் 2013-ல் தொடங்கப்பட்டது.

இதன் மூலம் சிறப்பு பயிற்சி பெற்ற மாணவர்கள் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் அதிக கட் ஆப் மார்க் பெற்று அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்தனர்.

கடந்த ஆண்டு ராமநாதபுரத்தை சேர்ந்த 11 மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரிகளிலும், ஒருவர் அரசு பல் மருத்துவ படிப்பிலும் சேர்ந்தனர். ஆனால் இந்த ஆண்டு 85 சதவீத ஒதுக்கீட்டிலும் மாணவர்களுக்கும் இடம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.

இதுதொடர்பாக எலைட் வகுப்புகளில் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் கூறியதாவது:-

பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்ப பின்னணியை கொண்டவர்களே அரசு பள்ளிகளில் படிக்கின்றனர். அவர்களுக்கு எம்.பி.பி.எஸ். இடம் கிடைப்பது இந்த பயிற்சி மூலம் சாத்தியமானது. ஆனால் நீட் தேர்வு கிராமபுற மாணவர்களுக்கு மருத்துவ கல்வியை எட்டாக் கனியாக்கிவிட்டது.

கிராமபுற மாணவர்கள் நீட் தேர்வில் குறைந்த பட்ச மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று இருந்தாலும் இடம் கிடைக்க வாய்ப்பு இல்லை. தமிழக அரசு ஒதுக்கீடு வழங்கினாலும் இந்த மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடியாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News