புதுவையில் வீட்டில் இருந்த இளம்பெண் திடீர் மாயம்
புதுச்சேரி:
சங்கராபுரத்தை சேர்ந்தவர் மனோஜ். இவரும், புதுவை மோந்திரேஸ் வீதியை சேர்ந்த சுகன்யா (23) என்ற பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
மனோஜ் பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சுகன்யா கணவர் வீட்டில் தங்கி இருந்த நிலையில் அடிக்கடி போனில் யாருடனோ பேசி வந்தார்.
இதனால் சுகன்யாவின் நடத்தையில் சந்தேகப்பட்ட மனோஜ் இதுபற்றி சுகன்யாவின் தாய் சுகந்திக்கு தகவல் தெரிவித்து அவரை அழைத்து செல்லுமாறு கூறினார்.
இதையடுத்து சுகன்யாவை கடந்த 5-ந் தேதி சுகந்தி தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி வீட்டில் இருந்த சுகன்யாவை திடீரென காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுகந்தி தனது மகள் மாயமானது குறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சுகன்யா சேலத்தை சேர்ந்த ஒரு வாலிபருடன் போனில் பேசி பழகி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சுகன்யா சேலத்துக்கு சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரை கண்டுபிடித்து அழைத்து வர போலீசார் சேலம் சென்றுள்ளனர்.