செய்திகள்

ஆனைமலை அருகே வாலிபரை வெட்டி கொன்று தண்டவாளத்தில் உடல் வீச்சு

Published On 2017-05-26 11:30 GMT   |   Update On 2017-05-26 11:30 GMT
ஆனைமலை அருகே 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் வெட்டுக்காயங்களுடன் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆனைமலை:

பாலக்காட்டில் இருந்து இன்று காலை திருச்செந்தூருக்கு ரெயில் வந்தது. ஆனைமலை மீனாட்சிபுரம் ரெயில்வே கேட் அருகே வந்தபோது ரெயிலை ஓட்டி வந்த டிரைவர் தண்டவாளம் அருகே வாலிபர் கிடப்பதை பார்த்தார்.

உடனே சாதுர்த்தியமாக ரெயிலை நிறுத்தினார். பின்னர் இது குறித்து ஆனைமலை போலீஸ் மற்றும் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். அப்போது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். வாலிபர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து 2 மணி நேர தாமதத்திற்கு பின்னர் ரெயில் புறப்பட்டு சென்றது. இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கொலை செய்து தண்டவாளம் அருகே வீசி சென்றவர்கள் யார்? கொலையுண்ட வாலிபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதே இடத்தில் நேற்று 63 வயது மதிக்கத்தக்க முதியவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். அது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News