செய்திகள்

திருமங்கலம் அருகே இடி தாக்கி விவசாயி பலி

Published On 2017-05-25 14:48 GMT   |   Update On 2017-05-25 14:48 GMT
திருமங்கலம் அருகே நேற்று இடியுடன் பலத்த மழை பெய்தது. அப்போது இடி தாக்கியதில் விவசாயி உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

பேரையூர்:

திருமங்கலம் அருகே பேரையூரை அடுத்துள்ள பழையூர் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது40), விவசாயி. இவரது மனைவி மாரீஸ்வரி. நேற்று வேல்முருகன் தனது மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் இடியுடன் பலத்த மழை கொட்டியது.

மழையை பொருட்படுத்தாமல் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இடி தாக்கியதில் வேல்முருகன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார். அவர் அழைத்து வந்த கன்றுகுட்டி மீதும் இடி தாக்கியதில் அதுவும் பரிதாபமாக இறந்தது.

இதுகுறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடி மருது பாண்டியர் நகரைச் சேர்ந்தவர் விஜயகண்ணன் (வயது 30). கட்டிடத்திற்கு கம்பி கட்டும் தொழிலாளி. இவருக்கு முத்துபேச்சி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

நேற்று விஜயகண்ணன் அதே பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது தண்ணீர் மோட்டார் போடுவதற்காக சுவிட்சை ஆன் செய்தபோது மின்சாரம் தாக்கியது. இதில் உடல் கருகி விஜயகண்ணன் இறந்தார்.

தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடம் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாலுகா போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சுப்பையா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News