செய்திகள்

கும்பகோணத்தில் வாலிபர் வெட்டிக் கொலை

Published On 2017-05-25 08:05 GMT   |   Update On 2017-05-25 08:06 GMT
பட்டப் பகலில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பட்டீஸ்வரம்:

கும்பகோணம் துக்காம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் சிவா என்கிற சிவானந்தம் (30). தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு குழந்தை உள்ளனர்.

சிவானந்தம் இன்று காலை பாலக்கரையில் இருந்து சென்னை பைபாஸ் சாலை ஆட்டோ நகரில் உள்ள கடைகளுக்கு மோட்டார் சைக்கிளில் தண்ணீர் கேன் சப்ளை செய்ய சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்து கொண்டிருந்தனர். ஆட்டோ நகர் மெயின் ரோட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென சிவானந்தத்தை வழி மறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதில் அவரது முகத்தில் பலத்த வெட்டு காயம் விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் இறந்ததை உறுதி செய்து கொண்ட கொலையாளிகள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

சிவானந்தம் கொலை செய்யப்பட்டு கிடப்பதை அந்த வழியாக வந்த பயணிகள் பார்த்து கும்பகோணம் தாலுகா போலீசுக்கு தகவல் கொடுத்தனர். டி.எஸ்.பி. கணேச மூர்த்தி,தாலுகா இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் சிவானந்தம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடைபெற்ற பைபாஸ் சாலையில் அமைந்துள்ள சி.சி.டி.வி. கேமிரா மூலம் கொலையாளிகள் குறித்து துப்பு துலக்கி வருகிறார்கள்.

கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

கொலை செய்யப்பட்ட சிவானந்தம் மீது போலீஸ் நிலையத்தில் குற்ற வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே முன் விரோதம் காரணமாக இக்கொலை நடைபெற்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
Tags:    

Similar News