செய்திகள்

அம்பத்தூரில் மத்திய அரசு அதிகாரி வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

Published On 2017-05-25 04:46 GMT   |   Update On 2017-05-25 04:46 GMT
அம்பத்தூரில் மத்திய அரசு அதிகாரி வீட்டில் 100 பவுன் நகை மற்றும் வைரம், வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லிவாக்கம்:

அம்பத்தூர், செகரட்டி யேட் காலனி, பள்ளித் தெருவை சேர்ந்தவர் சந்திரன்.

ஆவடியில் உள்ள மத்திய அரசின் கனரக தொழிற்சாலையில் கூடுதல் பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுமதி. குரோம்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக உள்ளார்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு சந்திரன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா சென்றார்.

இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் நள்ளிரவில் சந்திரனின் வீட்டு பூட்டை உடைத்து புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 100 பவுன் நகை மற்றும் வைரம், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்தனர்.

மேலும் வெள்ளி குடம், வெள்ளி சாமி சிலையையும் தூக்கி சென்றுவிட்டனர். கொள்ளைபோன மற்ற பொருட்களின் மதிப்பு ரூ.7 லட்சம் இருக்கும்.

இன்று காலை சந்திரனின் வீட்டில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் அவருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து அம்பத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்திருந்த ரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. சந்திரன் வெளியூர் சென்றிருப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.

எனவே சந்திரன் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற நபர்கள் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொள்ளையர்களின் வருகை அதே பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகி உள்ளதா? என்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.

சந்திரன் வீட்டில் எவ்வளவு பணம் கொள்ளை போனது என்று உடனடியாக தெரியவில்லை. அவர் வந்த பின்னர் தான் பணம் பற்றிய விபரம் தெரியவரும்.

மத்திய அரசு ஊழியர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News