செய்திகள்

சென்னையில் 100 டிகிரி வெயில் - உள் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்

Published On 2017-05-23 11:46 GMT   |   Update On 2017-05-23 11:46 GMT
தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு பல இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும், சென்னையில் வெப்பம் 100 டிகிரியாக இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழ்நாட்டில் கடந்த 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் வரலாறு காணாத அளவிற்கு வெயில் கொடுமையால் கடும் வெப்பம் நிலவுகிறது.

அதிகபட்சமாக திருத்தணியில் கடந்த சில நாட்களாக 110 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது. சென்னையில் அதிகபட்சமாக வெயில் கொடுமை 107 டிகிரியை தொட்டது. அதன் பிறகு வெயில் குறைந்து வருகிறது.

தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக இடியுடன் கூடிய கோடை மழை ஒரு சில இடங்களில் பெய்து வருகிறது.

அக்னி நட்சத்திரம் வருகிற 28-ந்தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு பல இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்களிலும், வடமாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வெப்பம் 100 டிகிரியாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.
Tags:    

Similar News