நாகர்கோவிலில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
நாகர்கோவில்:
நாகர்கோவில் குருசடி பகுதியை சேர்ந்தவர் பகவதி பெருமாள் (வயது 32). இவரது மனைவி விஜயகுமாரி (32). இவர்களுக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளது.
சம்பவத்தன்று காலையில் வீட்டில் இருந்து பகவதிபெருமாள் வேலைக்கு சென்று இருந்தார். இரவு வீட்டிற்கு வந்தபோது வீட்டில் இருந்த மனைவி விஜயகுமாரி மற்றும் 2 குழந்தைகள் மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மனைவி மற்றும் குழந்தைகளை தேடி உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடி பார்த்தார். எங்கும் அவர்கள் இல்லாததால் இது குறித்து ஆசாரிப்பள்ளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெரால்டின் வினோ, சாய்லெட்சுமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண் மற்றும் குழந்தைகளை தேடி வருகின்றனர்.
அஞ்சுகிராமம் வாரியூர் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி வீரலெட்சுமி (63). சம்பவத்தன்று நெல்லை மாவட்டம் காவல்கிணறு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை காவல்கிணற்றுக்கு தேடிச்சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை.
இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சாம்சன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து வீரலெட்சுமியை தேடி வருகின்றனர்.