செய்திகள்
தஞ்சை அருகே காலி குடங்களுடன் பொது மக்கள் மறியல்
தஞ்சை அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே உள்ள பிள்ளையார்பட்டி அம்பலார் தெருவில் கடந்த 6 மாதமாக சரிவர குடிநீர் சப்ளை செய்யவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை எடுத்து கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் பொது மக்கள் ஆத்திரம் அடைந்தனர்.
இன்று காலை அவர்கள் பிள்ளையார் பட்டியில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் தஞ்சை தாசில்தார் குருமூர்த்தி அங்கு விரைந்து சென்றார்.
அவர் பொது மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.அவரிடம் ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் சப்ளை செய்ய வேண்டும். இல்லா விட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தார். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து பொது மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.