உள்ளூர் செய்திகள்

கோவையில் 170.75 கிலோ குட்கா பறிமுதல்

Published On 2022-07-25 10:05 GMT   |   Update On 2022-07-25 10:05 GMT
  • மளிகை கடைகாரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • குட்காவை சட்டத்திற்கு விரோதமாக விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் தடை செய்யப்பட்ட குட்காவை சட்டத்திற்கு விரோதமாக விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில் துடியலூர் மற்றும் பேரூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பேரூர் தீத்திபாளையம் பகுதியில் உள்ள மளிகை கடையில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.

போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு 101.75 கிலோ குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கடை நடத்தி வந்த பீம்சன் (வயது 51) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் இருந்து குட்காவை பறிமுதல் செய்தனர். பின்னர் பீம்சனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோன்று துடியலூர் போலீசார் அப்பநாயக்கன் பாளையம் முல்லை நகர் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது முத்தீசன் (27) என்பவது கடையில் 20 கிலோ குட்கா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் குட்காவை பறிமுதல் செய்தனர்.

பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குட்கா விற்பனைக்கு வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது குளத்தூர் பகுதியில் செந்தில்வேல் குமார் (37) என்பவர் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 49 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். போலீசார் நேற்று ஒரே நாளில் 170.75 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர். சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்தார். 

Tags:    

Similar News