சாத்தான்குளம் அருகே வாலைகுருசுவாமி கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை
- வாலைகுருசுவாமி கோவில் ஆவணி திருவிழா கடந்த 30-ந்தேதி தொடங்கியது.
- சுவாமி பிரகார வீதி உலா வந்து மணி மண்டபத்தில் உற்சவ மூர்த்தியாக காட்சி தந்தனர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை வாலைகுருசுவாமி கோவில் ஆவணி திருவிழா கடந்த 30-ந்தேதி தொடங்கியது. முதல் நாள் சுவாமி உற்சவ விநாயகர், ஸ்ரீவாலாம்பிகை அம்பாள், சுவாமி சந்திரசேகரர் - மனோன்மணி அம்பாள் சமேதராக எழுந்தருள கொடியேற்றம் நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமி பிரகார வீதி உலா வந்து மணி மண்டபத்தில் உற்சவ மூர்த்தியாக காட்சி தந்தனர். தொடர்ந்து சாயரட்சை பூஜை, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் பெருங்குளம் செங்கோல் ஆதீனம் கலந்து கொண்டு அருளாசி வழங்கினார், இரவு சுவாமி உற்சவ விநாயகர் வாலாம்பிகை அம்பாள் சின்ன சப்பரத்திலும், பாலதிரிபுரசுந்தரி அம்பாள், வெள்ளி ரிஷப வாகனத்திலும், நடராஜர் , சிவகாமி அம்பாள் மாணிக்கவாசகர் சமேதராக பெரிய சப்பரத்திலும், சந்திரசேகர் மனோன்மணி அம்பாள் சமேதராக ரிஷப வாகனத்திலும் வீதி உலா வந்தனர்.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் உச்சிகால பூஜை, சிறப்பு அபிஷேகம், வாலாம்பிகை அம்பாள் சேத்திர வலம் வருதல், திருவிளக்கு பூஜை, திருவாசகம் முற்றோடுதல், இரவு சுவாமி சப்பர பவனி நடைபெற்றது. 6-ம் நாள் சாயரட்சை பூஜை, சொற்பொழிவு, கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம், ஸ்ரீவாலை குருகலா மன்றம் இணைந்து 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், உச்சிகால பூஜை, அலங்கார தீபாராதனை, பால்குடம் ஏந்தி பக்தர்கள் ஊர்வலமாக வருதல், இரவு சந்திரசேகர் - மனோன்மணி அம்பாள் சமேதராக கேந்திரம் வலம் வருதல், நடைபெற்றது.