செய்திகள்

தமிழகத்தில் பயங்கரவாதம் தலைதூக்க விடமாட்டோம் - அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2018-05-31 06:21 GMT   |   Update On 2018-05-31 06:21 GMT
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒடுக்குவதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் பயங்கரவாதம் தலைதூக்க விடமாட்டோம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #ThoothukudiFiring #RajiniInThoothukudi #Jayakumar
சென்னை:

தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின்போது கலவரம் வெடித்ததற்கு சமூக விரோதிகள் ஊடுருவியதே காரணம் எனவும், அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையம் மீது நம்பிக்கை இல்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், ரஜினியின் கருத்து பற்றி கேட்டனர். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

அமைதி, வளம், வளர்ச்சி என்ற அடிப்படையில் இந்த அரசு சென்றுகொண்டிருக்கிறது. வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒடுக்குவதில் அரசு உறுதியாக உள்ளது. தமிழகத்தில் பயங்கரவாதம் தலைதூக்க விடமாட்டோம்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உண்மையை கண்டறியவே விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. விசாரணைக் கமிஷன் அறிக்கை வரும்போதுதான் யார் மீது தவறு என்பது தெரியவரும்.



ரஜினிக்கும் முதல்வருக்கும் ஒரே இடத்தில் இருந்து உத்தரவுகள் வருவதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு. நாங்கள் யாரையும் சார்ந்து இல்லை. எங்களுக்கு என்று ஒரு தனித்தன்மை உள்ளது. மாற்றான் பேச்சைக் கேட்டு அவர்களுக்கு எடுபிடியாக என்றைக்கும் இருந்தது கிடையாது. தி.மு.க. வேண்டுமானால் அப்படி இருந்திருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார். #ThoothukudiFiring #RajiniInThoothukudi #Jayakumar
Tags:    

Similar News