வழிபாடு

திருச்செந்தூர் கோவில் ஆவணித்திருவிழா: சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி அம்பாள் வீதிஉலா

Published On 2022-08-20 05:03 GMT   |   Update On 2022-08-20 05:03 GMT
  • சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமுத்துகிடா வாகனத்தில் வீதி உலா வந்தார்.
  • வள்ளி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 17-ந் தேதி ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் ஒவ்வொரு வாகனங்களில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர்.

3-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் பூங்கேடய சப்பரத்திலும், வள்ளி அம்பாள் கேடய சப்பரத்திலும் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவிலை அடைந்தனர்.

பின்னர் மாலை 6.45 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

ஆவணித்திருவிழாவின் 4-ம் நாளான இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி தங்கமுத்து கிடா வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் உலா வருகிறார்கள்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News