ஆன்மிகம்

மதுரை மீனாட்சி கல்யாணம்

Published On 2019-03-21 04:55 GMT   |   Update On 2019-03-21 04:55 GMT
பங்குனி உத்திரம் தினத்தன்று நடைபெறும் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்வது பெரும் பாக்கியம். இவர்களது திருமணம் எப்படி நடந்தது என்று அறிந்து கொள்ளலாம்.
பங்குனி உத்திரம் தினத்தன்று நடைபெறும் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்வது பெரும் பாக்கியம். இவர்களது திருமணம் எப்படி நடந்தது தெரியுமா? மீனாட்சிக்கு திருமணம் என்றதும் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டு விட்டது. நாட்டின் அரசிக்கு திருமணம் என்றால் சும்மாவா? மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தனர்.

திருமணத்திற்கு நாள் குறித்த அன்று மணமகள் மீனாட்சியின் முகத்தில் வெட்கம் நிறையவே அப்பிக் கிடந்தது. தனது மணாளனை முதன் முதலாக சந்தித்த அனுபவம் அப்போது அவளை சிலிர்ப்பு கொள்ளச் செய்தது. எட்டு திக்கும் வென்று, இமயத்தையும் வென்றுவர சென்றபோதுதான் சிவபெருமானை முதன் முதலாக சந்தித்தாள் மீனாட்சி.

சிவபெருமானின் பார்வை பதிந்த மாத்திரத்தில் அவளது மூன்று தனங்களில் ஒன்று மறைந்து போயிற்று. அப்போதுதான், தன்னுடைய மணாளன் இவரே என்று எண்ணி, நாணினாள். ஒரு நல்ல நாளில் பூலோகம் வந்து மணந்து கொள்வதாக சிவபெருமான் உறுதியளித்ததை இப்போதும் நினைத்து மகிழ்ந்தாள். அப்போது, அவள் ஆவலோடு எதிர்பார்த்த சிவபெருமான் வந்து கொண்டிருந்தார்.

மகா விஷ்ணு, பிரம்மா மற்றும் தேவர்கள், தேவகனங்களும் உடன் வந்தனர். புலித்தோலை ஆடையாகவும், பாம்புகளை அணிகலன்களாகவும் கொண்டு காட்சிதரும் சிவபெருமான் அந்த கோலத்தில் இருந்து மாறியிருந்தார். சுந்தரேசுவரராக-மதுரை மாப்பிள்ளையாக வந்தார். பங்குனி உத்திர நாளில் நல்ல நேரம் வந்ததும் மீனாட்சியின் கழுத்தில் மங்கலநாண் பூட்டி தனது மனைவியாக ஏற்றுக் கொண்டார்.

திருமணம் முடிந்ததும் தடபுடலாக விருந்து நடக்குமேப அது மீனாட்சி கல்யாணத்திலும் நடந்தது. மலைபோல் சாதம் சமைக்கப்பட்டது. அதில் ஒரு பகுதி மட்டுமே காலியாகி இருந்தது. இதையறிந்த மீனாட்சி, அதுபற்றி தனது மணாளன் சிவபெருமானிடம் கூறினார். உடனே சிவபெருமான் குண்டோதரர்கள் இருவரை அங்கு வரவழைத்தார்.

மீதமுள்ள சாதம், பலகாரங்களை சாப்பிடுமாறு அவர்களை பணித்தார். அவர்கள் இருவரும் அடுத்த சில நிமிடங்களிலேயே அத்தனை உணவு வகைகளையும், பலகாரங்களையும் வேகமாக தின்று தீர்த்து விட்டனர். தாகத்தை தணிக்க பெரிய அண்டாக்களில் இருந்த தண்ணீரை மடக் மடக் என்று குடித்தனர். பெரிய அண்டாக்கள் எல்லாம் அவர்களுக்கு சிறிய டம்ளர்கள் போல் இருந்தன.

அந்த தண்ணீர் அவர்களுக்கு போதவில்லை. தாகம்... தாகம்... என்று கத்தினார். அப்போது சிவபெருமான், தன் கையை வைத்து அங்கு ஒரு நதியை உருவாக்கினார். அந்த நதி நீரை குடித்து குண்டோதரர்கள் தாகம் தணிந்தனர். சிவபெருமான் தன் கையை வைத்து உருவாக்கியதால் அந்த நதி “வைகை’’ ஆயிற்று.
Tags:    

Similar News