search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "meenachiamman"

    மீனாட்சியை சிவபெருமான் திருமணம் செய்த நிகழ்வு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.
    சிவபெருமானின் திருவிளையாடல்கள் அறுபத்து நான்கும் நடைபெற்ற சிறப்புமிகு இடம் மதுரை. ஆனாலும் இங்கு ஈசனுக்கு இரண்டாவது மரியாதைதான். ஏனெனில் இங்கு மீனாட்சியின் அரசாட்சியே நடக்கிறது.

    குலசேகரப் பாண்டியனுக்குப் பிறகு அவரது மகன் மலையத்துவஜ பாண்டியன் மதுரையை ஆண்டான். அவனுக்கு குழந்தை பேறு இல்லை. இதனால் புத்திர காமேஷ்டி யாகம் செய்தான். இதையடுத்து யாக குண்டத்தில் இருந்து அம்பாள், மூன்று வயது குழந்தையாக தோன்றினாள். அவளுக்கு தடாதகை என்று பெயரிட்டு அழைத்தனர். மீன் போன்ற கண்களை கொண்டவன் என்பதால் ‘மீனாட்சி’ என்றும் பெயர் பெற்றாள். மலையத்துவஜ பாண்டியனுக்கு ஒரே மகள் என்பதால், உரிய வயது வந்ததும், மீனாட்சி பாண்டிய நாட்டின் அரசியாக அரியணை ஏறினாள்.

    தன் தேசத்தை விரிவுபடுத்த எண்ணிய மீனாட்சி, திக்விஜயம் மேற்கொண்டாள். தன்னை எதிர்த்த மன்னர்களை எல்லாம் வென்றாள். அவளது வீரத்தின் கீழ் தேவலோகமும் கூட வந்தது. வெற்றியின் மீது இன்னும் அடங்காத தாகம் கொண்ட மீனாட்சி, நேராக கயிலை மலைக்குச் சென்றாள். தன்னை எதிர்க்கும் நோக்குடன் வந்த மீனாட்சியை, சிவபெருமான் நேருக்கு நேராக கண்ணை நோக்கினார். அதே போல் மீனாட்சியும் சிவபெருமானை பார்த்த நொடியில், மீனாட்சிக்குள் இருந்த பெண்ைம விழித்து, நாணம் குடிகொண்டது. மீனாட்சியின் அழகில் சொக்கிய காரணத்தால் தான், சிவபெருமானுக்கு ‘சொக்கநாதர்’ என்ற பெயர் வந்தது. அதோடு எப்போதும் சுடுகாட்டு சாம்பல் பூசி, மண்டை ஓடு மாலை அணிந்து காணப்படும் ஈசன், மீனாட்சிக்காக சுந்தரனாய் காட்சி தந்ததால், ‘சுந்தரேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படலானார்.

    மதுரைக்கு வந்து திருமணம் செய்து கொள்வதாக, மீனாட்சிக்கு ஈசன் வாக்கு கொடுத்தார். அதன்படி திருமால், பிரம்மா, தேவர்கள் புடைசூழ மதுரை சென்று மீனாட்சியை மணந்தார். மீனாட்சியை சிவபெருமான் திருமணம் செய்த நிகழ்வு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.

    இங்கு மீனாட்சி அம்மன் சன்னிதி எதிரில் பொற்றாமரை குளத்தின் அருகில் ‘மடப்பள்ளி சாம்பல்' வைக்கப்பட்டுள்ளது. இதனை வீட்டிற்கு சிறிது எடுத்துச்சென்று ‘மந்திரமாவது நீறு' என்னும் இத்தல சம்பந்தரின் பதிகம் பாடி இந்த மடப்பள்ளி சாம்பலை உடலில் தொடர்ந்து பூசிவந்தால் வெப்பு நோய்கள், அம்மை நோய்கள், பிற உடல் உபாதைகள் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    சித்திரை மாதம் வளர்பிறையில் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் 12 நாட்கள் விழா நடைபெறும். 8-ம் நாள் இரவில் ‘மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்' 9-ம் நாள் இரவில் ‘மீனாட்சி திக்விஜயம்', பத்தாம் நாள் காலையில் ‘மீனாட்சி திருக்கல்யாணம்' நடக்கிறது.
    மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடந்தது. திரளான பெண்கள் புதுத்தாலி அணிந்து வழிபாடு செய்தனர்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. அன்று மதுரையின் அரசியாக மீனாட்சி அம்மனுக்கு பட்டம் சூட்டப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மீனாட்சி, 8 திசைகளிலும் சென்று தேவர்களை வென்று இறைவன் சுந்தரேசுவரரிடம் அடையும் திக்கு விஜயம் நேற்று நடந்தது.

    சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் மற்றொரு நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மேற்கு-வடக்கு ஆடி வீதியில் இன்று காலை கோலாகலமாக நடந்தது.

    இதையொட்டி திருக்கல்யாண மண்டபம் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    திருக்கல்யாணத்தையொட்டி அதிகாலை 4 மணியளவில் சுவாமி- அம்மன் சித்திரை வீதிகளில் வெள்ளி சிம்மாசன வாகனத்தில் வலம் வந்தனர். அதன் பிறகு கன்னி ஊஞ்சலாகி திருக்கல்யாண மேடையில் எழுந்தருளினர்.

    முன்னதாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோர் வரிசையாக வந்தனர்.

    அனைத்து தெய்வங்களும் திருக்கல்யாண மேடையில் வீற்றிருந்தது கண் கொள்ளா காட்சியாக இருந்தது. மேடையின் வலதுபுறத்தில் பவளக்கனிவாய் பெருமாள், மீனாட்சி அம்மன், சுவாமி-பிரியாவிடை, சுப்பிரமணியர், தெய்வானை என அமர்ந்து அருள்பாலித்தனர்.

    மீனாட்சி அம்மன் பட்டுச்சேலை அணிந்து வைர கிரீடம், வைர மூக்குத்தி, பவளக்கல் பதித்த மாலைகள் அணிந்திருந்தார். சுந்தரேசுவரர் வெண்பட்டும், ஊதா நிற கல் பதித்த வைர கிரீடமும் அணிந்திருந்தார்.

    குலசேகரப்பட்டர் வழி சிவாச்சாரியார் சுந்தரேசுவரராகவும், உக்கிர பாண்டியர் பட்டர் வழி சிவாச்சாரியார் மீனாட்சியாகவும் வேட மேற்று மாலை மாற்றி திருக்கல்யாண நிகழ்ச்சியை நடத்தினர்.

    பழக்கூடையில் திருமாங்கல்யம் உள்ளிட்டவற்றை வைத்து பூஜை செய்யப்பட்டது. பின்னர் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.



    விநாயகர் பூஜை, காப்பு கட்டுதல், பாலிகை பூஜை, தாரை வார்த்தல், தங்கம், வெள்ளி பன்னீர் செம்புகள் மூலம் பன்னீர் தெளித்தல், கொன்றை மலர் மாலையுடன் ஆடை சாற்றுதல், சுவாமி-அம்மன் பிரதிநிதிகள் மாலை மாற்றுதல் ஆகிய பூஜைகள் நடந்தன.

    இன்று காலை 9.52 மணிக்கு மிதுன லக்கனத்தில் மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தது. மல்லிகை மலர்களால் சுற்றப்பட்ட தங்கத்தில் வைரம் பதித்த மங்கல நாண் பக்தர்களிடம் காட்டப்பட்டதுடன், சுவாமி- அம்மன், பிரியாவிடை முன்பும் 3 முறை காட்டப்பட்டது. அதன்பின்பு வேத மந்திரங்கள் முழங்க, மேளதாளம் இசைக்க மீனாட்சி அம்மன் கழுத்தில் மங்கல நாண் அணிவிக்கப்பட்டது.

    அப்போது பக்தர்கள் சுந்தரேசுவரா... மீனாட்சி அம்மன் என்று முழங்கினர். மேடையின் மேல் புறத்தில் இருந்து மலர்கள் அம்மன்-சுவாமி மீது தூவப்பட்டது.

    மீனாட்சி அம்மனுக்கு மங்கல நாண் அணிவிக்கப்பட்டதும் திருக்கல்யாண நிகழ்ச்சியை காண வந்திருந்த திரளான பெண் பக்தர்கள் தங்களது தாலிக்கயிறை புதிதாக மாற்றி அதில் குங்குமம் இட்டு ஒற்றிக் கொண்டனர்.

    அம்மனை தொடர்ந்து பிரியாவிடைக்கு மங்கல நாண் அணிவிக்கப்பட்டது. திருக்கல்யாணத்தை அடுத்து அக்கினி வலம் வருதல், சுவாமி-அம்மன் பிரதிநிதிகள் மேடையை வலம் வருதல், திருமாங்கல்யத்தில் தங்க பன்னீர் செம்பில் பன்னீர் தெளித்தல், நெய்வேத்தியம், ஆசீர்வாதம் என பூஜைகள் நடந்தன. அதன் பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது.

    திருக்கல்யாணம் முடிந்ததும் சுவாமி-அம்மன் உள்ளிட்ட தெய்வங்கள் மேடையில் இருந்து புறப்பாடாகி பழைய திருக்கல்யாண மகாலுக்கு சென்றனர்.

    இன்று இரவு நடைபெறும் அனந்தராயர் பூப்பல்லக்கில் மீனாட்சி அம்மனும், தங்க அம்பாரியுடன் கூடிய யானை வாகனத்தில் பிரியா விடையுடன் சுந்தரேசுவரரும் வலம் வருகிறார்கள்.

    அப்போது மாசி வீதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று சுவாமி-அம்மனை வழிபடுகிறார்கள்.

    சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மனுக்கு கிரீடம் சூடி பட்டாபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து மதுரையில் அம்மனின் ஆட்சி நேற்று முதல் தொடங்கியது.
    மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் மலையத்துவ ராஜனுக்கு மகளாக பிறந்த மீனாட்சி அம்மன் பட்டத்து ராணி ஆனார். சுந்தரேசுவரரை மணந்த பின், அவர்கள் இருவரும் சேர்ந்து மதுரை நகரை ஆண்டு வந்தனர். ஆவணி மாதம் முதல் பங்குனி மாதம் வரை சுந்தரேசுவரரும், சித்திரை முதல் ஆடி வரையிலான 4 மாதங்கள் மீனாட்சி அம்மனும் ஆட்சி செய்வதாக ஐதீகம்.

    அதன்படி மீனாட்சி அம்மனின் ஆட்சி தொடங்குவதை நினைவுபடுத்தும் வகையில் சித்திரை திருவிழாவின் 8-ம் நாளான நேற்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேக விழா அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் நடந்தது. இந்த விழாவையொட்டி இரவு 8 மணி அளவில் வைரக்கற்கள் பதிக்கப்பட்ட ‘ராயர் கிரீடம்’ எனப்படும் வைர கிரீடத்திற்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து இரவு 8.10 மணி அளவில் மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் சூட்டி, நவரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட தங்கத்தினால் ஆன செங்கோல் வழங்கப்பட்டது. மீன் கொடியும் மீனாட்சி அம்மனுக்கு வழங்கப்பட்டது. அப்போது பச்சை நிற பட்டுப்புடவை அணிந்திருந்த மீனாட்சி அம்மனுக்கு பரிவட்டம் கட்டி வேப்பம்பூ மாலையும், மகிழம் பூ மாலையும் அணிவிக்கப்பட்டன. பிறகு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

    மீனாட்சி அம்மனிடம் இருந்த செங்கோல், அம்மன் பிரதிநிதியான கோவில் தக்கார் கருமுத்து கண்ணனிடம் வழங்கப்பட்டது. அவர் செங்கோலை பெற்றுக்கொண்டு சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் மீனாட்சி அம்மனிடம் செங்கோலை கொடுத்தார்.

    பின்னர் மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து நான்கு மாசி வீதிகளிலும் பவனி வந்து காட்சி தந்தார். அவருடன் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், வெள்ளி சிம்மாசனத்தில் வீதி உலா வந்தனர். இதைத்தொடர்ந்து மதுரையில் இன்று முதல் மீனாட்சி அம்மனின் ஆட்சி தொடங்குகிறது.

    சிவபெருமானை மீனாட்சி அம்மன் போருக்கு அழைத்த சம்பவத்தை நினைவூட்டும் திக்கு விஜயம் இன்று(செவ்வாய்க்கிழமை) மாசி வீதியில் நடக்கிறது. இதையடுத்து நாளை (புதன்கிழமை) மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. கோவிலில் 4 கோபுர வாசல்களிலும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட உள்ளன. இதுதவிர திருக்கல்யாண மேடை ரூ.10 லட்சம் செலவில் பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. 50, 100 ரூபாய் டிக்கெட் மற்றும் புதிய உபயதாரர்கள் என 6,400 பேர் வடக்கு கோபுரம் வழியாகவும், 3,500 பேர் முன்னுரிமை அடிப்படையில் தெற்குகோபுரம் வழியாகவும், மிக முக்கிய பிரமுகர்கள் மேற்கு கோபுரம் வழியாகவும் திருக்கல்யாணத்தை காண அனுமதிக்கப்படுவார்கள்.

    மேலும் 11 இடங்களில் திருக்கல்யாண மொய் பணம் கோவில் சார்பில் வசூலிக்கப்படுகிறது. பக்தர்களுக்கு அவ்வப்போது பிஸ்கட் மற்றும் சோர்வு நீங்க நீர், மோர் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளது. 
    திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தில் கலந்துகொள்வதற்காக பவளக்கனிவாய் பெருமாள் 16-ந்தேதி புறப்படுகிறார். அவரோடு தெய்வானையுடன் முருகப்பெருமானும் புறப்படுகின்றனர்.
    மதுரையில் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 17-ந்தேதி மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனையொட்டி மீனாட்சி அம்மனின் அண்ணனாக கலந்துகொள்வதற்காக வருகிற 16-ந்தேதி திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் இருந்து பவளக்கனிவாய் பெருமாள் புறப்பட்டு மதுரைக்கு வருகிறார். அவர் தனது கையில் கென்னடி சுமந்து வருகிறார்.

    இதே சமயம் தனது தாய்-தந்தையின் திருமணத்தை கண்டுகளிப்பதற்காக திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து தெய்வானையுடன் சுப்பிரமணியசாமியும் புறப்பட்டு வருகின்றனர். அப்போது திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வரை வழிநெடுகிலுமாக ஆங்காங்கே பக்தர்கள் திருக்கண் அமைத்து சாமியை வரவேற்று தரிசனம் செய்கிறார்கள்.



    இதனையடுத்து 17-ந்தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்பதோடு 4 நாட்கள் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலிலேயே தங்கி இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். பிறகு 19-ந்தேதி பூப்பல்லக்கில் தெய்வானையுடன் முருகப்பெருமானும், பல்லக்கில் பவளக்கனிவாய் பெருமாளும் தனித்தனியாக எழுந்தருளி புறப்பட்டு தனது இருப்பிடமான திருப்பரங்குன்றத்தை நோக்கி வருவார்கள்.

    அப்போதும் மதுரையில் இருந்து திருப்பரங்குன்றம் வரையிலும் வழிநெடுகிலுமாக 100-க்கும் மேற்பட்ட இடங்களில் திருக்கண்கள் அமைக்கப்பட்டு சாமியை வரவேற்று பக்தர்கள் வழிபடுகிறார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் தொன்றுதொட்டு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 
    பங்குனி உத்திரம் தினத்தன்று நடைபெறும் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்வது பெரும் பாக்கியம். இவர்களது திருமணம் எப்படி நடந்தது என்று அறிந்து கொள்ளலாம்.
    பங்குனி உத்திரம் தினத்தன்று நடைபெறும் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்வது பெரும் பாக்கியம். இவர்களது திருமணம் எப்படி நடந்தது தெரியுமா? மீனாட்சிக்கு திருமணம் என்றதும் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டு விட்டது. நாட்டின் அரசிக்கு திருமணம் என்றால் சும்மாவா? மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தனர்.

    திருமணத்திற்கு நாள் குறித்த அன்று மணமகள் மீனாட்சியின் முகத்தில் வெட்கம் நிறையவே அப்பிக் கிடந்தது. தனது மணாளனை முதன் முதலாக சந்தித்த அனுபவம் அப்போது அவளை சிலிர்ப்பு கொள்ளச் செய்தது. எட்டு திக்கும் வென்று, இமயத்தையும் வென்றுவர சென்றபோதுதான் சிவபெருமானை முதன் முதலாக சந்தித்தாள் மீனாட்சி.

    சிவபெருமானின் பார்வை பதிந்த மாத்திரத்தில் அவளது மூன்று தனங்களில் ஒன்று மறைந்து போயிற்று. அப்போதுதான், தன்னுடைய மணாளன் இவரே என்று எண்ணி, நாணினாள். ஒரு நல்ல நாளில் பூலோகம் வந்து மணந்து கொள்வதாக சிவபெருமான் உறுதியளித்ததை இப்போதும் நினைத்து மகிழ்ந்தாள். அப்போது, அவள் ஆவலோடு எதிர்பார்த்த சிவபெருமான் வந்து கொண்டிருந்தார்.

    மகா விஷ்ணு, பிரம்மா மற்றும் தேவர்கள், தேவகனங்களும் உடன் வந்தனர். புலித்தோலை ஆடையாகவும், பாம்புகளை அணிகலன்களாகவும் கொண்டு காட்சிதரும் சிவபெருமான் அந்த கோலத்தில் இருந்து மாறியிருந்தார். சுந்தரேசுவரராக-மதுரை மாப்பிள்ளையாக வந்தார். பங்குனி உத்திர நாளில் நல்ல நேரம் வந்ததும் மீனாட்சியின் கழுத்தில் மங்கலநாண் பூட்டி தனது மனைவியாக ஏற்றுக் கொண்டார்.

    திருமணம் முடிந்ததும் தடபுடலாக விருந்து நடக்குமேப அது மீனாட்சி கல்யாணத்திலும் நடந்தது. மலைபோல் சாதம் சமைக்கப்பட்டது. அதில் ஒரு பகுதி மட்டுமே காலியாகி இருந்தது. இதையறிந்த மீனாட்சி, அதுபற்றி தனது மணாளன் சிவபெருமானிடம் கூறினார். உடனே சிவபெருமான் குண்டோதரர்கள் இருவரை அங்கு வரவழைத்தார்.

    மீதமுள்ள சாதம், பலகாரங்களை சாப்பிடுமாறு அவர்களை பணித்தார். அவர்கள் இருவரும் அடுத்த சில நிமிடங்களிலேயே அத்தனை உணவு வகைகளையும், பலகாரங்களையும் வேகமாக தின்று தீர்த்து விட்டனர். தாகத்தை தணிக்க பெரிய அண்டாக்களில் இருந்த தண்ணீரை மடக் மடக் என்று குடித்தனர். பெரிய அண்டாக்கள் எல்லாம் அவர்களுக்கு சிறிய டம்ளர்கள் போல் இருந்தன.

    அந்த தண்ணீர் அவர்களுக்கு போதவில்லை. தாகம்... தாகம்... என்று கத்தினார். அப்போது சிவபெருமான், தன் கையை வைத்து அங்கு ஒரு நதியை உருவாக்கினார். அந்த நதி நீரை குடித்து குண்டோதரர்கள் தாகம் தணிந்தனர். சிவபெருமான் தன் கையை வைத்து உருவாக்கியதால் அந்த நதி “வைகை’’ ஆயிற்று.
    ×