ஆன்மிகம்

பழனி மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

Published On 2019-02-20 07:46 GMT   |   Update On 2019-02-20 07:46 GMT
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் கட்டுப்பாட்டில் உள்ள பழனி கிழக்கு ரதவீதி மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் கட்டுப்பாட்டில் உள்ள பழனி கிழக்கு ரதவீதி மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழா கடந்த 1-ந்தேதி முகூர்த்தக்கால் நாட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்றிரவு 8.30 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு 16 வகை அபிஷேகம் நடந்தது.

பின்னர் மலர்களாலும், அணிகலன்களாலும் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு மங்கல நாண் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் தலைமை குருக்கள் அமிர்தலிங்கம் மாங்கல்யத்தை அணிவித்தார். ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற தீர்த்தக்குடம் எடுத்தும், மாவிளக்கு எடுத்தும், தீச்சட்டி எடுத்தும் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

நிகழ்ச்சியில் பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், கோவில் மேலாளர் உமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று(புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கும், நாளை இரவு 10 மணிக்கு கொடி இறக்குதலும் நடைபெறுகிறது. 
Tags:    

Similar News