ஆன்மிகம்

எட்டு லட்சுமிகளின் அருளாட்சி

Published On 2018-09-07 04:56 GMT   |   Update On 2018-09-07 04:56 GMT
எட்டு வகை லட்சுமிகளும் ஒருங்கிணைந்து, மகாலட்சுமி எனும் வடிவில் திருமாலுடன் திருமணக் கோலத்தில் பல்வேறு ஆலயங்களில் காட்சி தருகிறாள்.
எந்தக் குறையுமின்றி சகல செல்வங்களுடன் முதலில் தோன்றியவள் ஆதிலட்சுமி. அவளை வணங்குவதால், நோய்கள் நீங்கும். அதற்காக அஷ்டமங்கலப் பொருட்களைத் தனது திருவடியின் கீழ் கொண்டு காட்சி தரும் வகையில் அமைந்து அருள் தருபவள் ஆதிலட்சுமி.

உணவு வளம், உற்பத்திப் பெருக்கம் போன்றவற்றைக் கொடுத்தல், வயிறு தொடர்பான குறைகளை நீக்குதல் ஆகியவற்றுக்காக யானை வாகனத்தில் காட்சி தருபவள் தான்ய லட்சுமி.

எந்தச் செயலுக்கும் மனத்துணிவு இல்லையெனில், செயலை நடைமுறைப்படுத்துவது கடினமாகும். அந்த எண்ணத்திற்கு வலுவூட்டுபவள் சிம்ம பீடத்தில் அமர்ந்திருக்கும் தைரிய லட்சுமி.

கன்னிகை இருவர் உதவிபுரிய, கன்னிகை பீடத்தில் நன்னிலையில் அமர்ந்து அருள்பவள் சந்தான லட்சுமி! இவள் குழந்தைப்பேறு நல்கும் குணவதி. வெற்றியை நல்கும் வீரத் திருமகளாக அன்ன வாகனத்தில் அமர்ந்து அருளாட்சி செய்பவள் விஜயலட்சுமி.

கல்வியில் சிறக்க குழந்தைகளுக்கு அருளும் வகையில் சரஸ்வதி தேவியாக காட்சி தந்தவள், குதிரை வாகனத்தில் அமர்ந்து அருளும் வித்தியாலட்சுமியாகவும், சகல சவுபாக்கியங்களையும் குறைவின்றி நல்கும் வகையில், சவுபாக்கிய லட்சுமி என்னும் கஜலட்சுமியாகவும் காட்சி தருகிறாள்.

இடது கையில் கமண்டலம் தாங்கி, வலது கையில் வெற்றியை வைத்து, மனித வாழ்விற்குத் தேவையான செல்வத்தை வழிபடுவோருக்கு அளிப்பவளே தனலட்சுமி.

இந்த எட்டு வகை லட்சுமிகளும் ஒருங்கிணைந்து, மகாலட்சுமி எனும் வடிவில் திருமாலுடன் திருமணக் கோலத்தில் பல்வேறு ஆலயங்களில் காட்சி தருகிறாள்.
Tags:    

Similar News