ஆன்மிகம்
பழனி மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில், சாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்கள் கூட்டத்தினை படத்தில் காணலாம்.

பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

Published On 2018-06-11 03:10 GMT   |   Update On 2018-06-11 03:10 GMT
முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் 3-ம் படைவீடாக பழனி விளங்குகிறது. இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். திருவிழா காலம் என்றில்லாமல், ஆண்டு முழுவதும் பழனி மலைக்கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும்.

குறிப்பாக விடுமுறை தினங்களில் வழக்கத்தைவிட இருமடங்கு பக்தர்கள் பழனிக்கு வருகை தருவார்கள். அந்த வகையில் விடுமுறை தினம் மற்றும் முகூர்த்த நாளையொட்டி நேற்று மலைக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதன் காரணமாக படிப்பாதை, யானைப்பாதை, ரோப்கார் நிலையம், மின் இழுவை நிலையம் ஆகியவற்றில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பக்தர்கள் வருகை அதிகரித்ததால், மலைக்கோவில் வெளிப்பிரகாரம், பொது, கட்டணம், சிறப்பு தரிசன வழிகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதன் காரணமாக சுமார் 3 மணி நேரம் காத்திருந்த பின்னரே அவர்களால் சாமி தரிசனம் செய்ய முடிந்தது.

பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மின் இழுவை ரெயில் நிலையத்திலும் ஏராளமானோர் காத்திருந்தனர். இதனால் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, சாமி தரிசனம் செய்த பிறகு படிப்பாதை வழியாக மலைக்கோவிலில் இருந்து கீழே இறங்கி செல்லும்படி பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினர் படிப்பாதை வழியாக கீழே இறங்கி சென்றனர்.

Tags:    

Similar News