ஆன்மிகம்
6-ம் நாள் சித்திரைத்திருவிழாவில், ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன்.

மரகத மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு நாளை பட்டாபிஷேகம்

Published On 2018-04-24 03:24 GMT   |   Update On 2018-04-24 03:24 GMT
மதுரை சித்திரைத் திருவிழாவில் மரகத மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு நாளை பட்டாபிஷேகம் நடக்கிறது. 27-ந்தேதி திருக்கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனும், சுவாமியும் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார்கள். நேற்று சுந்தரேசுவரர் தங்க ரிஷப வாகனத்திலும், மீனாட்சி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் 4 மாசி வீதிகளில் வலம் வந்தனர். அப்போது திரளான பக்தர்கள் மத்தியில் கோவில் ஓதுவார்கள் சைவ சமய வரலாற்றை பாடினர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதற்காக தங்கப் பல்லக்கில் அம்மனும், சுவாமியும் எழுந்தருளி கீழசித்திரை வீதி, தெற்குஆவணி மூலவீதி, திண்டுக்கல் ரோடு வழியாக வலம் வருகிறார்கள். மேலமாசி வீதி ஆதீனம் கட்டுச்செட்டி மண்டகப்படியில் தங்கி, பிற்பகல் 3 மணிக்கு அங்கிருந்து புறப்பாடாகி கோவிலுக்குள் வருவர்.

பின்னர் அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் இரவு 7.40 மணிக்கு மேல் 8.04 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் மரகத மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப்படுகிறது. அப்போது அம்மனுக்கு ரத்தினங்களால் இழைக்கப்பட்ட ராயர் கிரீடம் சாற்றி, ரத்தினங்களால் இழைத்த செங்கோல் வழங்கி சிறப்பு ஆராதனைகளுடன் பட்டாபிஷேகம் நடத்தப்படுகிறது. மீனாட்சி அம்மன் செங்கோலை, அவருடைய பிரதி நிதியாக இருந்து கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் பெற்றுக் கொள்கிறார்.


திரளான பக்தர்கள் மத்தியில் கோவில் ஓதுவார்கள் சைவ சமய வரலாற்றை பாடினர்.

இரவு 9 மணிக்கு மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக கோலத்தில் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி, மதுரையின் அரசியாக மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகிறார்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. திருக்கல்யாணம் நடைபெறும் வடக்கு, மேற்கு ஆடி வீதிகளில் பக்தர்கள் அமருவதற்கு வசதியாக பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருக்கல்யாணத்தை காண தரிசன கட்டணமாக ரூ.500, ரூ.200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண சீட்டை இணைய தளம் மூலம் மட்டுடே முன்பதிவு செய்து பெற முடியும். ரூ.200 முன்பதிவு செய்து குறுஞ்செய்தி வந்தவர்களுக்கு அனுமதிச் சீட்டு வினியோகம் மேற்கு சித்தரை வீதியில் உள்ள கோவில் பிர்லா விடுதியில் வழங்கப்பட்டு வருகிறது. 500 ரூபாய் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) குறுஞ்செய்தி வரும். அதை தொடர்ந்து அவர்களுக்கு 500 ரூபாய் டிக்கெட் வழங்கப்படும். 
Tags:    

Similar News