ஆன்மிகம்
சூரிய பிரபை வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்த காட்சி.

பிரம்மோற்சவ விழா 7-வது நாள்: சூரிய பிரபை வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதிஉலா

Published On 2017-11-22 06:30 GMT   |   Update On 2017-11-22 06:31 GMT
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான நேற்று காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா நடந்தது.
திருப்பதி அருகே உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 9.30 மணிவரை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடந்தது. உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மதியம் 12.30 மணியில் இருந்து 2.30 மணிவரை கிருஷ்ணசாமி கோவில் முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. அதைத்தொடர்ந்து மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ஊஞ்சல் சேவை நடந்தது. பின்னர் உற்சவர் வாகன மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு, அலங்கரிக்கப்பட்ட உற்சவர் பத்மாவதி தாயார் சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளி இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேற்கண்ட வீதிஉலாவுக்கு முன்னால் கலை நிகழ்ச்சிகள், நாட்டிய, நடன நிகழ்ச்சிகள் நடந்தன. கோவிலின் மாடவீதிகளில் கூடியிருந்த திரளான பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், தேவஸ்தான இணை அதிகாரி போலா.பாஸ்கர், முதன்மைப் பாதுகாப்பு அதிகாரி ரவிகிருஷ்ணா, கூடுதல் பாதுகாப்பு அதிகாரி சிவக்குமார்ரெட்டி, கோவில் துணை அதிகாரி முனிரெத்தினம் ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று (புதன்கிழமை) காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதிஉலா நடக்கிறது.
Tags:    

Similar News