search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில்"

    • வருகிற 16-ந் தேதி ரதசப்தமி விழா நடக்கிறது.
    • தாயார் உற்சவர்களுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.

    திருமலை:

    திருச்சானூர் பத்மாவதி கோவிலில் வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ரதசப்தமி விழா நடக்கிறது. இதனை முன்னிட்டு அன்று காலை 7.15 மணி முதல் 8.15 மணி வரை சூரிய பிரபை வாகனத்திலும், 8.45 முதல் 9.45 மணி வரை ஹம்ச வாகனத்திலும், 10.15 முதல் 11.15 மணி வரை அஸ்வ வாகனத்திலும், 11.45 முதல் 12.45 வரை கருட வாகனம், மதியம் 1.15 மணி முதல் 2.15 மணி வரை சின்னசேஷ வாகனம், மாலை 6 மணி முதல் 7 மணி வரை சந்திரபிரபை வாகனம், இரவு 8.30 முதல் 9.30 மணி வரை கஜ வாகனத்திலும் சாமி மாட வீதியில் உலா நடக்கிறது.

    மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஸ்ரீபத்மாவதி தாயார் கோவிலின் கிருஷ்ணசுவாமி முக மண்டபத்தில் உள்ள தாயார் உற்சவர்களுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.

    இதையொட்டி, பத்மாவதி தாயார் கோவிலில் நடைபெறும் அபிஷேகம், லட்சுமி பூஜை, ஆர்ஜித கல்யாணோற்சவம், குங்கும அர்ச்சனை, பிரேக் தரிசனம், ஊஞ்சல்சேவை, வேதாசிர்வச்சனம் ஆகிய சேவைகளை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

    மேலும் திருச்சானூர் ஸ்ரீபத்மாவதி தாயார் கோவிலுடன் இணைந்த ஸ்ரீசூர்யநாராயண சுவாமி கோவிலில் காலை 6 மணி முதல் 7 மணி வரை அஸ்வ வாகனத்தில் பக்தர்களுக்கு சாமி காட்சியளிக்கிறார்.

    ரத சப்தமியை முன்னிட்டு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நேற்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.

    அதன்படி காலை 6.30 மணி முதல் 9 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் உள்ளிட்டவை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யப்பட்டன.

    அதன்பின்னர் நாமகோபு, ஸ்ரீசூரணம், கஸ்தூரி மஞ்சள், பச்சைக் கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமப்பூ, கிச்சிலிக்கட்டை மற்றும் இதர வாசனை திரவியங்களின் புனித நீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் சர்வ தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி நேற்று கோவிலில் கல்யாணோற்சவம், ஊஞ்சல்சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும் ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் ஸ்வர்ணகுமாரி வழங்கிய திரைச்சீலைகள் கோவிலில் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

    • புஷ்கரணியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
    • நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருப்பதி:

    திருச்சானூர் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான நேற்று காலை பஞ்சமி தீர்த்தம், இரவு கொடியிறக்கம் நடந்தது. பத்ம சரோவரம் புஷ்கரணியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று அதிகாலை உற்சவர் பத்மாவதி தாயார் பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    கோவிலில் இருந்து உற்சவர்களான பத்மாவதி தாயார், சுதர்சன சக்கரத்தாழ்வார் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக பஞ்சமி மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். பஞ்சமி தீர்த்த நிகழ்ச்சிக்காக அந்த மண்டபம் பல்வேறு வகையான பழங்கள் மற்றும் ஒரு டன் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அந்த அலங்காரம் பக்தர்களை கவர்ந்தது.

    உற்சவர்களான பத்மாவதி தாயார், சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. திருமஞ்சனம் முடிந்ததும் துளசி, ஏலக்காய் மாலைகள், பல வண்ணமலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தைப் பார்த்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

    மதியம் 12 மணியில் இருந்து 12.10 மணி வரை உற்சவர்களான பத்மாவதி தாயார், சுதர்சன சக்ரத்தாழ்வாருக்கு சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அப்போது அர்ச்சகர்கள் சுதர்சன சக்கரத்தாழ்வாரை பத்ம சரோவரம் புஷ்கரணிக்கு எடுத்துச் சென்று 3 முறை நீரில் மூழ்கி எடுத்தனர். அப்போது புஷ்கரணியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்காக பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... எனக் கோஷமிட்டு 3 முறை நீரில் மூழ்கி புனித நீராடினர்.

     இரவு தங்கத் திருச்சி வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிறகு கொடியிறக்கத்துக்கான நிகழ்ச்சிகள் நடந்தது. கார்த்திகை பிரம்மோற்சவ விழா தொடக்க நாளில் கோவில் கொடிமரத்தில் ஏற்றப்பட்ட கொடியை இரவு இறக்கியதும் 9 நாட்கள் நடந்து வந்த வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது. இந்தநிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை புஷ்ப யாகம் நடக்கிறது.

    • 14-ந்தேதி நடைபெறும் கஜவாகன சேவைக்கு அதிக பக்தர்கள் வருகை.
    • பஞ்சமி தீர்த்தத்தை முன்னிட்டு பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடுவார்கள்.

    திருப்பதி:

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் தேவஸ்தான தலைவர் பூமண. கருணாகர் ரெட்டி கலந்துகொண்டார்.

    பத்மாவதி தாயார் கோவிலில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக நாளை (வியாழக்கிழமை) அங்குரார்பணம் நடக்கிறது. 14-ந்தேதி நடைபெறும் கஜவாகன சேவைக்கு அதிக பக்தர்கள் வருகை தரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    18-ந்தேதி பஞ்சமி தீர்த்தத்தை முன்னிட்டு பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடுவார்கள். இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. ரூ.9 கோடி செலவில் புஷ்கரணி நவீனமயமாக்கப்பட்டு தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கோவிலில் காலை 6 மணி முதல் 9 மணி வரை ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் போன்றவற்றை நீரால் சுத்தம் செய்த பின்னர், நாமகோபு, ஸ்ரீசூர்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சை கற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம், கிச்சிலிக்கட்டை போன்ற வாசனை திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. அதன்பிறகு பக்தர்கள் சர்வ தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் ஐதராபாத்தை சேர்ந்த சுவர்ண குமார் ரெட்டி 11 திரைச்சீலைகளும், குண்டூரை சேர்ந்த அருண்குமார், பத்மாவதி, திருச்சானூரை சேர்ந்த பவித்ரா மற்றும் ரஜினி ஆகியோர் 4 திரைச்சீலைகளும் வழங்கினர்.

    • வரலட்சுமி விரதத்தில் பக்தர்கள் நேரடியாக பங்கேற்க நாளை காலை 9 மணிக்கு 150 டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
    • நேரடி தரிசனத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பக்தர்கள் ரூ.1000 செலுத்தி டிக்கெட் பெற்று கொள்ளலாம்.

    திருப்பதி:

    திருப்பதி, திருச்சானூர் ஸ்ரீபத்மாவதி தாயார் கோவிலில் ஸ்ரீ வரலட்சுமி விரதம் வரும் 25-ந்தேதி பிரமாண்டமாக நடைபெறும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற 25-ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை தன மண்டபத்தில் வரலட்சுமி விரதம் நடைபெறும். மாலை 6 மணிக்கு பத்மாவதி தாயார் தங்க ரதத்தில் மாட வீதிகளில் உலா வருகிறார்.

    வரலட்சுமி விரதத்தில் பக்தர்கள் நேரடியாக பங்கேற்க நாளை காலை 9 மணிக்கு 150 டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

    இதேபோல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள பக்தர்களுக்கு பத்மாவதி தாயார் கோவிலில் உள்ள குங்கும அர்ச்சனை கவுண்டரில் வரும் 24-ந்தேதி நேரடியாக 150 தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட உள்ளது.

    நேரடி தரிசனத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பக்தர்கள் ரூ.1000 செலுத்தி டிக்கெட் பெற்று கொள்ளலாம். ஒரு தரிசன டிக்கெட்டுக்கு 2 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். டிக்கெட்டுகள் பெற்ற பக்தர்கள் வரும் 26-ந் தேதி முதல் 90 நாட்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    வரலட்சுமி விரதம் நடைபெறும். நாளில் அபிஷேகம், கல்யாண உற்சவம், வஸ்திர அலங்கார சேவை, அபிஷேக தரிசனம், லட்சுமி பூஜை, ஊஞ்சல் சேவை, வி.ஐ.பி. பிரேக் தரிசனம் மற்றும் வேத ஆசீர்வசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

    • கருட வாகன வீதிஉலா நடந்தது.
    • சுந்தரராஜசாமிக்கு அபிஷேகமும், ஊஞ்சல் சேவை நடந்தது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சுந்தரராஜசாமி அவதார மகோற்சவம் நடந்தது வந்தது.

    விழாவின் 3-வது நாளான நேற்று கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி, சுந்தரராஜசாமிக்கு காலை அபிஷேகமும், மாலை ஊஞ்சல் சேவையும் நடந்தது.

    இரவு கருட வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் சுந்தரராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவில் கோவில் உதவி அதிகாரி ரமேஷ் உள்பட கலந்து கொண்டனர்.

    • உற்சவர் சுந்தரராஜசாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • இன்று இரவு கருட வாகனத்தில் சுந்தரராஜசாமி அருள்பாலிக்கிறார்.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சுந்தரராஜசாமி அவதார மகோற்சவம் நடந்து வருகிறது. உற்சவத்தின் 2-வது நாளான ேநற்று மதியம் ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் உற்சவர் சுந்தரராஜசாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் உற்சவருக்கு ஊஞ்சல் சேவை நடந்தது.

    இரவு உற்சவர் சுந்தரராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் அனுமன் வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உற்சவத்தின் 3-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கருட வாகனத்தில் சுந்தரராஜசாமி எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இத்துடன் சுந்தரராஜசாமி அவதார மகோற்சவம் நிறைவடைகிறது.

    • இன்று இரவு அனுமன் வாகன வீதிஉலா நடக்கிறது.
    • நாளை இரவு கருட வாகன வீதிஉலா நடக்கிறது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சுந்தரராஜசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அவரின் அவதார மகோற்சவம் 3 நாட்கள் நடக்கின்றன. தொடக்க நாளான நேற்று மதியம் 2 மணியில் இருந்து மாலை 3.30 மணி வரை கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணசாமி முக மண்டபத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, சுந்தரராஜசாமிக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய சுகந்த திரவியத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6.15 வரை சுந்தரராஜசாமிக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை பெரிய சேஷ வாகனச் சேவை நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, சுந்தரராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    சுந்தரராஜசாமி அவதார மகோற்சவத்தின் 2-வது நாளான இன்று (சனிக்கிழமை) இரவு அனுமன் வாகன வீதிஉலா, 3-வது நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு கருட வாகன வீதிஉலா நடக்கிறது. அதில் உற்சவர் சுந்தரராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    இந்த மகோற்சவத்தையொட்டி கோவிலில் 3 நாட்களுக்கு பத்மாவதி தாயார் ஊஞ்சல் சேவையை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

    • நீராழி மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு அபிஷேகம் நடந்தது.
    • உற்சவர் பத்மாவதி தாயார் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று அதிகாலை தாயார் சுப்ரபாதத்தில் எழுந்தருளல், சஹஸ்ர நாமார்ச்சனை, நித்யார்ச்சனை நடந்தது. மாலை 3.30 மணியில் இருந்து மாலை 5 மணி வரை பத்ம புஷ்கரணியில் உள்ள நீராழி மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு அபிஷேகம் நடந்தது.

    அதன் பிறகு மாலை 6.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை தெப்போற்சவம் நடந்தது. அதில் உற்சவர் பத்மாவதி தாயார் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி 3 முறை பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தெப்போற்சவம் முடிந்ததும் உற்சவர் பத்மாவதி தாயார் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    • தெப்போற்சவம் இன்று தொடங்கி ஜூன் 4-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
    • தெப்போற்சவத்தால் 5 நாட்களுக்கு கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் இன்று (புதன்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஜூன்) 4-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. தினமும் மாலை 6.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை உற்சவர் பத்மாவதி தாயார் தெப்பத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    அதையொட்டி முதல் நாளான இன்று உற்சவர்களான ருக்மணி, சத்யபாமா சமேத ஸ்ரீகிருஷ்ணர், 2-வது நாளான நாளை (வியாழக்கிழமை) சுந்தரராஜசாமி மற்றும் கடைசி 3 நாட்களுக்கு மாலை 3.30 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை நீராழி மண்டபத்தில் தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது. அதன்பிறகு உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    ஜூன் 3-ந்தேதி இரவு 8 மணிக்கு யானை வாகனத்திலும், ஜூன் 4-ந்தேதி இரவு 8 மணிக்கு கருட வாகனத்திலும் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    தெப்போற்சவத்தால் கோவிலில் மேற்கண்ட 5 நாட்களுக்கு கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தெப்போற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
    • 4-ந் தேதி கருட வாகன சேவை நடக்கிறது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற 31-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 4-ந் தேதி வரை 5 தெப்போற்சவம் நடக்கிறது. தினமும் மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை பத்மசரோவரத்தில் தாயார் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். தெப்போற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு எல்லா துக்கங்களும் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    முதல் நாளான 31-ந் தேதி ருக்மணி, சத்யபாமாவுடன் கிருஷ்ணசுவாமி, இரண்டாம் நாள் சுந்தரராஜசுவாமி, கடைசி மூன்று நாட்கள் பத்மாவதி தாயார் ஆகியோர் தெப்பத்தில் உலா வருவார்கள். இதனை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக நீரடா மண்டபத்தில் மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது. வருகிற 3-ந் தேதி இரவு 8 மணிக்கு தாயாருக்கு கஜவாகன சேவையும், 4-ந் தேதி இரவு 8 மணிக்கு கருட வாகன சேவையும் நடக்கிறது. தெப்போற்சவம் முடிந்து தினமும் கோவில் வீதிகளில் தாயார் ஊர்வலம் நடைபெறும்.

    தெப்போற்சவத்தையொட்டி 5 நாட்களுக்கு கல்யாண உற்சவம், ஊஞ்சல்சேவை ரத்து செய்யப்பட்டது.

    • ‘வைகரீ ரூபாய அலர்மேல்மங்காய நமஹ’ எனும் மந்திரம் மிகவும் பிரசித்தி பெற்றது.
    • தாயார் அலர்மேல்மங்கை என்றும் வணங்கப்படுகிறார்.

    வைகுண்டத்தில் நாராயணின் திருமார்பில் உறையும் மகாலட்சுமியே திருச்சானூரில் பத்மாவதி தேவியாய் அருள்கிறாள். பத்மாவதி - ஸ்ரீநிவாசன் திருமணச் செலவுக்குப் பணம் இல்லாததால் குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் ராமநிஷ்காம பொற்காசுகளை கடனாகப் பெற்று கலியுகம் முடியும் வரை கடனுக்கு வட்டி செலுத்துவதாக வாக்களித்தார் ஸ்ரீநிவாசன்.

    மகாலட்சுமி, திருமலையில் திருவேங்கடவனின் திருமார்பில் குடியேறவும் தனது அம்சமான பத்மாவதி கீழ்த் திருப்பதியில், திருச்சானூரில் எழுந்தருளுமாறும் வரம் பெற்றதாக வரலாறு. பத்மாவதியை தரிசிப்பவர்கள் வேங்கடவன் ஆணைப்படி சகல செல்வங்களும் கிட்ட, அதில் ஒரு பகுதியை வேங்கடவனுக்குக் காணிக்கையாக செலுத்துகின்றனர். வட்டியை அளந்து கொடுக்கும் பொறுப்பை ஏற்ற கோவிந்தராஜப் பெருமாளை இன்றும் காசு அளக்கும் படியுடன் கீழ்த் திருப்பதியில் தரிசிக்கலாம்.

    பத்மாவதி-ஸ்ரீநிவாசன் திருமண வைபவத்தில் கறிவேப்பிலையும் கனகாம்பரமும் சேர்க்கப்படாததால் தாயாருக்கும் பெருமாளுக்கும் ஊடல் ஏற்பட்டு தாயார் கீழ்த் திருப்பதியில் அமர்ந்தாராம். எனவே, இன்றும் திருப்பதியில் கனகாம்பர மலரையும், கறிவேப்பிலையையும் எதற்கும் சேர்ப்பதில்லை. தாயார் அலர்மேல்மங்கை என்றும் வணங்கப்படுகிறார். கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம் கொண்டு அருட்காட்சியளிக்கிறாள்.

    தல தீர்த்தம், பத்ம ஸரோவர் ஆகும். பஞ்சமி தீர்த்தம் எனும் விழா இத்தீர்த்தத்தில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. தினமும் இரவில் திருமலையிலிருந்து திருவேங்கடவன் இறங்கி வந்து அலர்மேல் மங்கைத் தாயாருடன் ஏகாந்தமாக இருந்து விட்டு பின் விடிவதற்குள் திருமலைக்குச் செல்வதாக ஐதீகம். திருமலை வேங்கடவனை தரிசிக்கும் முன், முதலில் கீழ்த் திருப்பதியில் கோவிந்தராஜப் பெருமாள், பிறகு அலர்மேல்மங்கைத் தாயார், அதற்குப்பின் திருமலை புஷ்கரணிக் கரையில் உள்ள வராகமூர்த்தி, அதன் பின்னரே வேங்கடவன் தரிசனம் என்பதுதான் இங்கு வழிபடு மரபு என்பார்கள்.

    பக்தர்களுக்கு சுகங்களை வாரி வாரி வழங்குவதால், திருச்சானூர், சுகபுரி எனப்படுகிறது. பத்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த சிறப்புடையவள் அலர்மேல்மங்கைத் தாயார். திருமலையில் ஸ்வஸ்திவசனம் எனும் சமஸ்கிருத வரவேற்பை தினமும் வேங்கடவனுக்கு சமர்ப்பிக்கிறார்கள். அதில், 'உன்னுடன் அந்தர்யாமியாக உள்ள அலர்மேல்மங்கைக்கும் நல்வரவு' என்று ஒரு சொற்றொடர் உண்டு. திருமலை நாயகனோடு ஒன்றிய நிலையில் அலர்மேல்மங்கை இருக்கிறாள் என்பது இதனால் தெளிவாகிறது.

    அலர்மேல்மங்கையின் தங்கத்தேர், வெள்ளித்தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கார்த்திகை மாத பஞ்சமி தீர்த்த ஸ்நானத்தின் போது, திருமலையிலிருந்து பத்மாவதிக்கு பட்டுப்புடவை, தங்கச் செயின், மஞ்சள், குங்குமம், அன்னபிரசாதங்கள் சீர்வரிசையாக வருகின்றன. அவை திருச்சானூர் மாட வீதிகளில் யானை மீது ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு பின் தாயாருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.

    கார்த்திகை மாதத்தில் தாயாருக்கு குங்குமத்தால் செய்யப்படும் லட்சார்ச்சனை வைபவம் தனிச் சிறப்புடையது. திருச்சானூருக்கு அருகில் உள்ள கல்யாண வனத்தில் பத்மாவதித் தாயார் திருமணத்திற்காக மஞ்சள் அரைத்த யந்திரக் கல்லை இன்றும் காணலாம். கல்யாண விருந்து தயாரானவுடன் நிவாசரின் யோசனைப்படி அந்த பிரசாதங்களை அஹோபிலம் நரசிம்மருக்கு இருவரும் அந்த திசை நோக்கி வைத்து நிவேதித்தார்களாம்.

    'வைகரீ ரூபாய அலர்மேல்மங்காய நமஹ' எனும் மந்திரம் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் துயிலெழுகையில் இந்த மந்திரத்தை கூறினால் அன்று முழுவதும் பத்மாவதி தேவியின் அருள் கிட்டும் என்பது ஐதீகம். கீழ்த் திருப்பதி பேருந்து நிலையத்திலிருந்து திருச்சானூர் சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது.

    • திரளான பக்தர்கள் வடம் பிடித்து தங்கத்தேரை இழுத்தனர்.
    • நெய் தீபம், கற்பூர ஆரத்தி காண்பித்தும் பத்மாவதி தாயாரை தரிசித்தனர்.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை தங்கத் தேரோட்டம் நடந்தது. திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி பங்கேற்று தங்கத் தேரோட்டத்தை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து திரளான பக்தர்கள் வடம் பிடித்து தங்கத்தேரை இழுத்தனர்.

    உற்சவர் பத்மாவதி தாயார் தங்கம், வைர ஆபரணங்கள், பல வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு தங்கத்தேரில் எழுந்தருளி திரளான பக்தர்கள் வெள்ளத்தில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாடவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேங்காய் உடைத்தும், நெய் தீபம் மற்றும் கற்பூர ஆரத்தி காண்பித்தும் பத்மாவதி தாயாரை தரிசித்தனர்.

    தேரோட்டத்தில் கோவில் துணை அதிகாரி கோவிந்தராஜன் மற்றும் பிற கோவில் பணியாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×