ஆன்மிகம்

மணலி புதுநகர் அய்யா வைகுண்டசாமி கோவில் தேரோட்டம்

Published On 2017-10-16 06:07 GMT   |   Update On 2017-10-16 06:07 GMT
மணலி புதுநகர் அய்யா வைகுண்டசாமி கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
மணலி புதுநகர் வைகுண்டபுரத்தில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதியில் 10 நாட்கள் நடைபெறும் புரட்டாசி மாத தேர்திருவிழா மற்றும் திருஏடுவாசிப்பு கடந்த 6-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை பணிவிடை, மதியம் உச்சிப்படிப்பு, மாலை திருஏடுவாசிப்பு, இரவில் அய்யா வைகுண்டர் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவின் கடைசி நாளான நேற்று முக்கிய நிகழ்ச்சியான அய்யா தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக காலை 6 மணிக்கு பணிவிடை உகப்படிப்பு நடந்தது. மதியம் 12 மணிக்கு அய்யா வைகுண்ட தர்மபதி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார்.

பின்னர் சென்னை மட்டும் இன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த திரளான ஆண், பெண் பக்தர்கள், பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். வாண வேடிக்கை, சங்கு முழக்கம், நாதஸ்வர கச்சேரி, செண்டை மேளம் முழங்க திருத்தேர் புறப்பட்டு மணலி புதுநகர் பிரதான வீதிகளில் வலம் வந்து, மாலையில் தேர் நிலையை வந்தடைந்தது.

தேரோட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சமத்துவ மக்கள் கழக தலைவர் ஏ.நாராயணன், முன்னாள் எம்.பி. ஜெயதுரை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, மாவட்ட தலைவர் ஆதிகுருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News