ஆன்மிகம்
பரங்கிப்பேட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பரங்கிப்பேட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பரங்கிப்பேட்டையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் கோவிலில் முதல் காலயாக பூஜை நடைபெற்றது. மேலும் நாடிசந்தனம், சிறப்பு ஹோமம் ஆகியவை நடைபெற்றது.
கும்பாபிஷேக நாளான நேற்று கோவிலில் இரண்டாம் காலயாக பூஜை, கோ பூஜை, அனுக்ஜை பூஜை ஆகியவை நடைபெற்றது. இதையடுத்து யாக சாலையில் இருந்து மேள, தாளம் முழங்க கடம் புறப்பட்டு சென்று கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது அங்கிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து மூலவர் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.