ஆன்மிகம்

தென்தாமரைகுளம் தூய பனிமய அன்னை ஆலய தேர் பவனி

Published On 2017-08-06 02:32 GMT   |   Update On 2017-08-06 02:32 GMT
தென்தாமரைகுளம் தூய பனிமய அன்னை ஆலயத்தில் பங்கு பொன் விழாவின் கடைசி நாளான நேற்று ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது.
தென்தாமரைகுளம் தூய பனிமய அன்னை ஆலயத்தில் பங்கு பொன்விழா மற்றும் குடும்ப விழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது. விழாவின் கடைசி நாளான நேற்று காலை 8 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதற்கு குழித்துறை மறை மாவட்டத்தை சேர்ந்த அருட்பணியாளர் செல்லையன் தலைமை தாங்கினார். கோட்டார் மறை மாவட்ட குருகுல முதல்வர் சாலமோன் மறையுரை ஆற்றினார். இதில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் பங்கு தந்தையர்கள் கலந்து கொண்டனர்.

பகல் 3.30 மணிக்கு பனிமய அன்னையின் அலங்கார தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 6 மணிக்கு கொடிஇறக்கமும், நற்கருணை ஆசீரும் நடந்தன. இரவு 7 மணிக்கு பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தலைமையில் ‘குடும்பம் என்பது குழப்பமா அல்லது குதூகலமா’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை டாக்டர் ராஜன், துணை தலைவர் ஜான்போஸ்கோ, செயலாளர் ரெஷ்மி, பொருளாளர் பிரிட்டோ ஜெயசிங், துணை செயலாளர் சகாய நிஷா, பங்கு மக்கள், பங்கு அருட்பணி பேரவை, நிதிக்குழு மற்றும் தணிக்கை குழுவினர் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News