ஆன்மிகம்

சீவலப்பேரி துர்காம்பிகா கோவிலில் ஆடிப்பூர லட்சார்ச்சனை விழா

Published On 2017-07-27 03:29 GMT   |   Update On 2017-07-27 03:29 GMT
பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரி துர்காம்பிகா கோவிலில் ஆடிப்பூர லட்சார்ச்சனை விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரி துர்காம்பிகா கோவிலில் ஆடி மாதம் பூரத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் லட்சார்ச்சனை விழா நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான லட்சார்ச்சனை விழா கடந்த 24-ந் தேதி தொடங்கி தினமும் நடந்து வந்தது.

இந்த லட்சார்ச்சனை நிறைவு விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 5 மணிக்கு விஷ்ணு, துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 8 மணிக்கு சிறப்பு ஹோமங்களும், பூஜைகளும் நடந்தன.

காலை 10 மணிக்கு கணபதி ஹோமம், வடுகு பூஜை, கஜ பூஜை, கோ பூஜை, பிரம்மச்சரிய பூஜை, சுமங்கலி பூஜைகள் நடந்தன. சுமங்கலி பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். மதியம் 12.30 மணிக்கு மகா சண்டி ஹோமம், மதியம் 1 மணிக்கு சிறப்பு பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. பகல் 1.30 மணிக்கு யாகசாலையில் இருந்து கும்பங்கள் மேளதாளங்கள் முழங்க கோவிலில் அம்மன் சன்னதியை சென்றடைந்தது.

அங்கு கணபதி, துர்க்கை அம்மன், மகா விஷ்ணுவுக்கு, 16 வகையான பொருட்களால் அபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏராளமான பெண்கள் விளக்கு ஏற்றி அம்மனை வழிப்பட்டனர்.

இரவில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு புஷ்பாஞ்சலியும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது. விழாவையொட்டி நெல்லை சந்திப்பில் இருந்து சீவலப்பேரிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஏற்பாடுகளை துர்காம்பிகா தேவஸ்தான தலைவர் டி.லீலா கிருஷ்ணன், செயலாளர் சொ.சுப்பையா, திருப்பணிக்குழு தலைவர் சுப்பிரமணியன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News