சினிமா

மெர்சல் படத்துக்கு தடை: ஐகோர்ட்டில் இன்று விசாரணை

Published On 2017-10-27 04:28 GMT   |   Update On 2017-10-27 04:28 GMT
மெர்சல் படத்துக்கு தடை கேட்ட வழக்கின் விசாரணை இன்று ஐகோர்ட்டில் நடக்கிறது.
நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த சரக்கு சேவை வரி, ‘டிஜிட்டல்’ இந்தியா திட்டம் ஆகியவற்றை கடுமையாக விமர்சித்து இருப்பதாக பா.ஜ.க. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில், மெர்சல் படத்துக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஏ.அஸ்வத்தாமன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

அதில், சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.), குறித்து தவறான தகவல் மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும், இந்த படத்துக்கு அவசர கதியில் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்திய இறையாண்மைக்கு எதிரான காட்சிகளை கொண்ட மெர்சல் படத்தை திரையிட தடை விதிக்கவேண்டும். இந்த படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை திரும்பப்பெற உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.



நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.சுந்தர் ஆகியோர் முன்பு மனுதாரர் அஸ்வத்தாமன் ஆஜராகி, தான் தாக்கல் செய்த மனுவை உடனே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News