சினிமா

ரஜினிகாந்த்துக்கு கூடுதல் பாதுகாப்பு: இந்து அமைப்புகள் கோரிக்கை மனு

Published On 2017-05-25 04:03 GMT   |   Update On 2017-05-25 04:03 GMT
அரசியலில் ஈடுபட இருப்பது போல பேசி வரும் ரஜினிகாந்த் வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பும், ஆதரவும் உள்ளது. இதுதொடர்பாக தினமும் பல்வேறு தரப்பினர் கருத்துகள் தெரிவித்து வருகிறார்கள்.

தமிழர் முன்னேற்றப்படை என்ற அமைப்பு சார்பில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவபொம்மை எரிக்கும் போராட்டம் நடந்தது. இதனால் சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் சார்பில் கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அகில இந்திய இந்து சத்யசேனா என்ற அமைப்பின் தலைவர் வசந்தகுமார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை நேற்று கொடுத்தார். அந்த கோரிக்கை மனுவில் ரஜினிகாந்த் வீட்டிற்கு மட்டுமல்லாமல் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்திற்கு நேரில் சென்று கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.
Tags:    

Similar News