செய்திகள்

காஷ்மீரில் டாங்கரில் இருந்த 650 கிலோ போதைப்பொருள் பறிமுதல் - போலீசார் அதிரடி

Published On 2019-05-22 05:22 GMT   |   Update On 2019-05-22 05:22 GMT
ஜம்மு காஷ்மீரின் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், போதைப்பொருட்கள் தயாரிக்க பயன்படும் 650 கிலோ பாப்பி விதைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் ரம்பான் பகுதியில் உள்ள ஜம்மு- ஸ்ரீநகருக்கு இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் எண்ணெய் டாங்கர் ஒன்று வந்தது. அதனை நிறுத்தச் சொல்லிவிட்டு, அதன்முன் நின்றுக் கொண்டிருந்த காரில் போலீசார் சோதனை மேற்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த டாங்கரின் ஓட்டுனர் உட்பட உடனிருந்தவர்கள் அதிலிருந்து குதித்து தப்பிச் சென்றனர். இதையடுத்து போலீசார் அந்த டாங்கரை சுற்றி வளைத்தனர். அதனை சோதனை செய்தபோது 650 கிலோ போதைப்பொருட்கள் தயாரிக்க பயன்படும் பாப்பி விதைகள் கடத்திவரப்பட்டது கண்டறியப்பட்டது. 



இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்து, தப்பியோடிய கடத்தல்காரர்களை போலீசார் தேடி வருகின்றனர். இக்கடத்தல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேப்போல் திரிபுரா மாநிலத்தில் கைலஷ்னகர் பகுதியில் நேற்று 518 கிலோ கஞ்சா கடத்தி வந்த 3 பேர், போலீசாரால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.   
Tags:    

Similar News